

5 மீனவர்களின் தூக்குத்தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்ட மறை ஆயர் சேசு ராஜா தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
மீனவர்கள் தூக்கை நிறுத்தி வைக்க வேண்டும். இலங்கை சிறையிலுள்ள 24 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட 82 விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களின் குடும்பத்தாரும், அவர்களுடன் மீனவ சமுதாயத்தினர், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் என 3000 பேர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். திமுகவின் சுப.தங்கவேலம், காங்கிரஸ் கட்சியின் ராமன் உன்னி, அதிமுகவின் அர்ஜுனன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அண்ணாதுரை ஆகியோர் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
முன்னதாக, ராமேசுவரத்தில் மீனவப் பிரதிநிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், 5 மீனவர்களின் தூக்குத்தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற வேலை நிறுத்தம், இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும் ஒரு வார காலத்திற்குள் மத்திய அரசு இலங்கைக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் தண்டனையை நிறுத்திவைக்க அழுத்தம் கொடுக்கத் தவறினால் நவம்பர் 7ம் தேதி அனைத்து விசைப்படகு மீனவர் பிரநிதிகளின் அவசரக் கூட்டத்தை கூட்டி பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவிக்கப்படும், என தீர்மானம் இயற்றப்பட்டது.