Published : 15 Jul 2017 09:06 AM
Last Updated : 15 Jul 2017 09:06 AM

பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் கிணற்றோடு சேர்த்து நிலத்தையும் கிராமத்தினருக்கு விற்க ஓபிஎஸ் சம்மதம்: நள்ளிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தை

பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் ஓ,பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமிக்கு சொந்தமான தோட்டத்து கிணறு பிரச்சினையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு தொடங்கிய பேச்சு வார்த்தை நள்ளிரவு 1.30 மணி வரை நடந்தது. இதில் ஓ.பன்னீர்செல் வமும் கலந்துகொண்டார்.

தேனி மாவட்டம் லட்சுமிபுரம் அருகேயுள்ள கோம்பை அடிவாரம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜய லட்சுமிக்கு சொந்தமான இடத்தில் 200 அடி ஆழ கிணறு உள்ளது. இந்த கிணறு தோண்டியதால் அருகி லுள்ள லட்சுமிபுரத்தின் குடிநீர் ஆதாரம் அடியோடு பாதிக்கப்பட்ட தாகக் கூறி, இந்த கிணற்றை ஊராட் சிக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து அதிகாரிகள் நடத் திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், அடுத்த கட்டமாக நேற்று முன்தினம் இருதரப்பினருக்கும் இடையே பேச்சுவார்தை நடந்தது. இதில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடரும் என தெரிவிக்கப்பட்டது.

ஓபிஎஸ் வருகை

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு விமானம் மூலம் மதுரை வந்த ஓ.பன்னீர்செல்வம், இரவு 10 மணிக்கு தேனி வந்தார். தேனியிலுள்ள விருந்தினர் மாளிகையில் கிராம மக்கள் சார்பில் முன்னாள் ஊராட்சித் தலைவர் ஜெயபாலன் உள்ளிட்ட கிராம குழுவினர் 10 பேர், ஓ.பன்னீர்செல்வம், அவரது தம்பி ஓ.ராஜா, வழக்கறிஞர் சந்திரசேகரன் ஆகியோரும் மாவட்ட ஆட்சியர் என்.வெங் கடாசலம், மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தினர். இரவு 10.30 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை நள்ளிரவு 1.30 மணி வரை நீடித்தது.

பேச்சுவார்தை தொடங்கிய வுடன் முதலில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். கிணற்றில் இருந்து 90 நாட்களுக்கு முழுமையாக தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குள் வைகை அணைநீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து வட புதுப்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப் படுகிறது. இந்த திட்டத்தை நீட்டிப்பு செய்து லட்சுமிபுரத்துக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்கிறேன். இதற்காக ரூ.75 லட்சம் மதிப்பில் திட்ட மதிப்பீடு மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யலாம். இதற்கு சம்மதிக்காவிட்டால் நிலத்தை எழுதி வாங்கிக் கொள்ளுங்கள். கிணறு இல்லாமல் வெறும் நிலத்தை வைத்து விவசாயம் செய்யமுடியாது. கிணற்றுடன் சேர்த்து நிலத்தையும் வாங்கிக்கொள்ளுங்கள். இது குறித்து 90 நாட்களுக்குள் முடிவு சொல்லுங்கள். இல்லாவிட்டால் நான் வேறு யாருக்காவது நிலத்தை விற்றுவிடுகிறேன் என்று கூறிவிட்டு, பேச்சுவார்த்தைக்கு வந்த கிராம குழுவினர் அவர்களுக்குள் பேசி முடிவெடுக்க ஏதுவாக சிறிது நேரம் விருந்தினர் மாளிகையின் வெளியில் வந்து நின்றார்.

அரை மணி நேரம் கழித்து மீண்டும் உள்ளே சென்றவர், என்ன முடிவெடுத்தீர்கள் என கேட்டுள்ளார். இதற்கு கிராமக் குழுவினர், ஊர் மக்களிடம் கலந்து பேசிவிட்டு முடிவை சொல்வதாக கூறியுள்ளனர். நீங்கள் நிலத்தை வாங்கிக்கொள்வதாக இருந்தால் என்னை எதிர்பார்க்க வேண்டாம், பவர் பத்திரம் எழுதிக்கொடுக்க சொல்கிறேன். நீங்கள் வழக்கறிஞர் சந்திரசேகரனை தொடர்புகொண்டு எப்பொழுது வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தை முடிய நள்ளிரவு 1.30 மணியானது. பேச்சுவார்த்தையில் மாவட்ட ஆட் சியர் வெங்கடாசலமும், எஸ்.பி. பாஸ்கரனும் பார்வையாளராக மட்டுமே கலந்துகொண்டனர். இவர்கள் சார்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

கிராமத்தினரிடம் ஆதங்கம்

பேச்சுவார்த்தைக்கு வந்தவர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் பேசி முடித்துவிட்டு அனைவரும் வெளியில் வந்தபோது, உங்கள் ஊர் வழியாகத்தான் நான் காரில் செல்கிறேன். அனைவரும் தெரிந்த நபர்கள்தான். யாராவது ஒருவர் எனது காரை மறித்து ஊர் பிரச்சினை குறித்து என்னிடம் தெரிவித்திருந்தால் அப்போதே முடிவு செய்திருக்கலாமே என ஆதங்கப்பட்டுள்ளார்.

நிலத்தின் மதிப்பு ரூ.6 கோடி

லட்சுமிபுரம் அருகே கோம்பை பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமிக்கு சொந்தமாக 40 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் உள்ள கிணறுதான் பிரச்சனைக்குரியதாக உள்ளது. பேச்சுவார்த்தையில் கிணற்றுக்குகூட பணம் தரவேண்டாம். நிலத்தை முழுமையாக வாங்கிக் கொள்ளுங்கள் என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு சென்ட் இடம் ரூ.15 ஆயிரம் என அப்பகுதியின் மதிப்பாக உள்ளது. இதன்படி ஒரு ஏக்கர் ரூ.15 லட்சம் என்றால், மொத்த நிலத்தின் மதிப்பு ரூ.6 கோடியாகும்.

கிராம மக்கள் நிலத்தை வாங்கிக்கொள்வதாக இருந்தால் என்னை எதிர்பார்க்க வேண்டாம், பவர் பத்திரம் எழுதிக்கொடுக்க சொல்கிறேன். நீங்கள் என் வழக்கறிஞரை தொடர்புகொண்டு எப்பொழுது வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம் என ஓபிஎஸ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x