Published : 12 Jul 2017 12:32 PM
Last Updated : 12 Jul 2017 12:32 PM

ஏடிஎம்-ல் பணம் எடுத்தவருக்கு இந்தியில் வந்த குறுஞ்செய்தி

மத்திய பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தி மொழியை நாடு முழுவதும் திணிக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழகத்தில் அவ்வப்போது எதிர்ப்பு தெரிவிக் கப்பட்டு வருகிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் மைல் கற்கள், ஊரின் எல்லையை காட்டும் இடம், ரயில் நிலையம், அஞ்சலகம் என அனைத்து இடங்களிலும் இந்தி மொழியை புகுத்த மத்திய அரசு தீவிர முயற்சியை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கடைவீதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் ஆசிரியர் நிர்மல் என்பவர் நேற்று மாலை பணம் எடுத்துள்ளார். அப்போது, ஏடிஎம் இயந்திரத்தில் எவ்வளவு தொகை எடுக்கப்பட்டது, மீதம் கணக்கில் எவ்வளவு இருப்பு உள்ளது என்ற குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) அவரது செல்போனுக்கு வந்தது. அந்த குறுந்தகவலில் ஊர் பெயர் மட்டுமே ஆங்கிலத்தில் இருந்தது. மற்ற தகவல்கள் அனைத்தும் இந்தியில் இருந்ததால், அதன் விவரத்தை தெரிந்து கொள்ள முடியாமல் அவர் தவித்துள்ளார்.

இதுகுறித்து ஆசிரியர் நிர்மல் கூறும்போது, “நான் பாபநாசத்தில் நேற்று பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்தேன். அப்போது இயந்திரத்திலிருந்து அச்சிட்டு வழங்கும் துண்டுச் சீட்டு வரவில்லை. பின்னர், செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. வழக்கமாக ஆங்கிலத்தில் வரும் குறுந்தகவல் இந்தியில் வந்திருந்ததால், அதைப் பார்த்த நான் அதிர்ச்சியடைந்தேன். எனக்கு இந்தி படிக்க தெரியாததால் தகவலை படிக்க முடியாமல் சிரமப்பட்டேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x