

செங்குன்றத்தில் பள்ளி மாணவர் களுடன் சேர்ந்து 2 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் விழாவில் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பங்கேற்றார்.
உலக சுற்றுப்புற சூழல் தினத் தன்று (5.6.2017) வேப்பேரியிலுள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில், காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வ நாதன் மரக்கன்றினை நட்டு, மரம் நடும் பணியை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து சென்னை பெருநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள், காவல் அலுவலகங்கள் மற்றும் அதை சுற்றி யுள்ள பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணியை அந்தந்த பகுதி போலீஸார் செய்து வருகின்றனர்.
செங்குன்றம் பாயசம்பாக்கத்தில் நேற்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்துகொண்டு மரக்கன்றினை நட்டு விழாவைத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர்கள் மூலம் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
சென்னை பெருநகர காவல் துறை சார்பில் கடந்த ஒரு மாதத்தில் சென்னையில் 28 ஆயிரத்து 4 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில், அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் மட்டும் 13 ஆயிரத்து 222 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.