

இயற்கை மரணமடைந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியின் கண்களும், உடலும் மருத்துவ மனைக்கு தானமாகத் தரப் பட்டது.
சென்னை சைதாப்பேட்டை (மேற்கு) பெருமாள் கோயில் தெருவில் வசித்து வந்தவர் ஆர்.கமலநாபன் (82). பொதுத்துறை வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், கடந்த 30-ம் தேதி இயற்கை மரணடைந்தார்.
அவருடைய விருப்பத்தின்படி குடும்ப உறுப்பினர்கள் அவரது கண்களை சென்னை சங்கர நேத் ராலயா கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர். அதே போல் அவரது உடலை சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு தானமாகக் கொடுத்தனர். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், வாசுதேவன், எத்திராஜன், ரங்கநாதன் ஆகிய மகன்களும் உள்ளனர்.
தந்தையின் கண்கள் மற்றும் உடல் தானம் குறித்து வங்கி அதிகாரியான அவரது மகன் எத்திராஜன் கூறியதாவது:
தந்தையின் விருப்பப்படியே அவரது கண்களும், உடலும் தானம் செய்தோம். தந்தையின் அம்மா அம்புஜம் கடந்த 2001-ம் ஆண்டு உயிரிழந்தார். அவரது கண்களும் கண் மருத்துவமனைக்கு தானம் செய்யப்பட்டது. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் கண்கள் மற்றும் உடல் தானம் செய்வதாக பதிவு செய்து இருக்கிறோம். இதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித் தார்.