Published : 10 Jul 2017 04:55 PM
Last Updated : 10 Jul 2017 04:55 PM

வெடி விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வெடி விபத்தில் உயிரிழந்த மாரியப்பன் குடும்பத்துக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் திமுக உறுப்பினர் கே.என்.நேரு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து முதல்வர் பேசியதாவது:

''திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், கண்ணுடையான்பட்டி கிராமம், பொத்தமேட்டுபட்டி பகுதியில் உள்ள பழைய இரும்புக் கடையில் நடந்த வெடி விபத்தில் மாரியப்பன் என்பவர் கடந்த ஜூன் 29-ம் தேதி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டதுடன், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அருளானந்து, கனகராஜ் ஆகியோருக்கு தலா ரூ. 50 ஆயிரமும், சிறு காயமடைந்த பாலசுப்ரமணியனுக்கு ரூ. 25 ஆயிரமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகத்துக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வெடி விபத்து குறித்து உரிய விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கும், காவல் துறைக்கும் உத்தரவிட்டுள்ளேன்'' என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x