Published : 24 Nov 2014 10:04 AM
Last Updated : 24 Nov 2014 10:04 AM

சென்னை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு

சென்னை விமான நிலையத்தில் உள்ள எபோலா பரிசோதனை மையத்தை, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.

மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எபோலா நோயால் இதுவரை சுமார் 16 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் எபோலா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. எபோலா பாதிப்புள்ள மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து வருபவர்கள் இங்கு தீவிரமாக பரிசோதிக்கப் படுகின்றனர்.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் எபோலா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை மையங்களை, சுகாதாரத்துறை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்நிலையில் அந்தந்த மாநில சுகாதாரத்துறை செயலாளர்கள் விமான நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள எபோலா பரிசோதனை மையங்களை ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது.

அதன்படி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள எபோலா பரிசோதனை மையத்துக்கு நேற்று வந்தனர். பரிசோதனை மையத்தை பார்வையிட்ட அவர்கள், பரிசோதனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் போன்ற அனைத்து வசதிகளும் இருக்கிறதா என்பது ஆய்வு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x