Published : 30 Jul 2017 08:42 AM
Last Updated : 30 Jul 2017 08:42 AM

காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் போரூர் ஏரியில் தூய்மை பணிகள்: மாணவர்கள் உட்பட 1,200 பேர் பங்கேற்பு

போரூர் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் 1,200 பேர் சுத்தம் செய்துள்ளனர்.

பொது மக்கள், வாகன ஓட்டிகள், மாணவ மாணவிகளின் நலன் கருதி சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பல்வேறு நலத்திட்ட மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

475 போலீஸார்

அதன் ஒரு பகுதியாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்றான போரூர் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி, அவர் தலைமையில், சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் ஜெயராமன், போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் பெரியய்யா, இணை ஆணையர் சுதாகர் என 475 போலீஸார், கல்லூரி மாணவ மாணவிகள், ரோட்டரி கிளப்பைச் சேர்ந்தவர்கள், ஈஷா யோகா மைய உறுப்பினர்கள் என 1,200 பேர் இணைந்து போரூர் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளை நேற்று காலை சுத்தம் செய்தனர். இதில் சேகரமான குப்பைகளை லாரி மூலம் அப்புறப்படுத்தினர்.

4 பிரதான ஏரிகள்

இதுகுறித்து, காவல் ஆணை யர் ஏ.கே.விஸ்வநாதன் கூறும் போது, “சென்னை பெருநகர காவல்துறையின் பொது நலன் பணியாக சென்னையில் உள்ள 4 பிரதான ஏரிகளை தூய்மை படுத்தும் பணியின் தொடக்க மாக போரூர் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்துள்ளோம். போரூர் ஏரியின் 2 கிலோ மீட்டர் நீளமுள்ள ஏரிக்கரையை தூய்மைப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெறும். மற்ற ஏரிகள் தூய்மைபடுத்தும் பணி விரைவில் தொடங்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x