Published : 12 Jul 2017 10:20 AM
Last Updated : 12 Jul 2017 10:20 AM

அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் வழியாக இந்தியாவுக்கு வரும் சீன மருந்து பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய சோதனை மையம்: மத்திய அரசு அமைக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சீனாவில் இருந்துவரும் மருந்துப் பொருட்களின் தரத்தைப் பரிசோதிக்க, அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்களில் பரிசோதனை மையங்களை மத்திய அரசு அமைக்க வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தியாவில் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு கொடிய நோய்களுக்கான மருந்துகள் பெரும் பாலும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவின் மருந்து மூலப் பொருள் இறக்குமதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. கடந்த 1991-ல் சீனாவில் இருந்து இந்தியா வுக்கு இறக்குமதி செய்யப்பட்ட மருந்து மூலப்பொருட்களின் அளவு வெறும் 0.3 சதவீதம் மட்டுமே.

ஆனால், தற்போது சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி யாகும் ஆக்டிவ் பார்மசூட்டிக்கல் இன்கிரிடியன்ட்ஸ் (ஏபிஐ) எனப் படும் மருந்து மூலப்பொருட்களின் அளவு 92 சதவீதமாக உள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் இந்திய மருந்து உற்பத்தியை சீனா கொஞ் சம் கொஞ்சமாக விழுங்கிவிட்டது.

இதனால் இந்தியாவில் மருந்து உற்பத்தியில் கொடி கட்டிப் பறந்த பொதுத்துறை மருந்து தயாரிப்பு நிறுவனங்களான இந்துஸ்தான் ஆன்ட்டிபயாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்ஏஎல்), பெங்கால் கெமிக்கல் அண்ட் பார்மசூட்டிக்கல்ஸ் லிமி டெட் (பிசிபிஎல்) மற்றும் இண்டி யன் பார்மசூட்டிக்கல் அண்ட் டிரக்ஸ் லிமிடெட் (ஐடிபிஎல்) போன்றவை கூட நலிவடைந்து விட்டன.

நிபுணர் குழு

சீனாவில் இருந்து இறக்குமதி யாகும் மருந்து அல்லது மூலப் பொருட்கள் இந்தியாவில் எவ்வித ஆய்வுக்கோ அல்லது தரக்கட்டுப் பாட்டு சோதனைக்கோ உட்படுத்தப் படுவதில்லை. இதனால், சீனாவில் இருந்து பல்வேறு பெயர்களில் இந்தியாவுக்குள் தடையின்றி வரும் தரமற்ற மருந்துப் பொருட்கள் 4-ல் ஒரு பங்கு விலை குறைத்து விற்கப்படுவதால், இந்திய மருந்து கம்பெனிகள் இழுத்துமூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. இதன் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு, இதுதொடர்பாக ஆராய விஞ்ஞானி கடோச் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது.

மருந்து பூங்கா

‘தரமற்ற சீன மருந்து மூலப் பொருள் அல்லது மருந்துகள் இந்தியாவுக்குள் நுழையும் முன் பாகவே தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்களில் தரப் பரி சோதனை மையங்கள் அமைப்பது, உள்நாட்டு மருந்து தயாரிப்புகளை ஊக்குவிக்க அனைத்து மாநிலங் களிலும் மருந்து பூங்கா அமைப்பது, போகர் காலத்து உள்நாட்டு மருந்து கண்டுபிடிப்புகள், உற்பத்தி மற்றும் அது சார்ந்த அறிவியல் தொழி்ல் நுட்பங்களையும் நிறுவனங்களை யும் அங்கீகரிப்பது, உள்நாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கி போதிய கடனுதவி அளித்து கொள்முதல் செய்வது என பல்வேறு பரிந்துரைகளை மத்திய அரசுக்கு நிபுணர் குழு வழங்கியுள்ளது.

இந்தப் பரிந்துரைகளைப் போர்க் கால அடிப்படையில் செயல்படுத்து வோம் எனக் கூறிய மத்திய அரசு, 2015-ம் ஆண்டை ‘இந்திய மருந்து மூலப் பொருட்களுக்கான ஆண்டாக’ அறிவித்ததோடு சரி, குழுவின் எந்தப் பரிந்துரைகளையும் அமல்படுத்தவில்லை என குற்றம் சாட்டுகின்றனர் இந்திய மருந்து உற்பத்தியாளர்கள்.

தரமற்ற சீன மருந்துகள்

இந்நிலையில், மத்திய அரசின் மருந்து மூலப்பொருள் கொள்கை களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘வின்கெம் லேப்ஸ்’ என்ற புற்றுநோய் மருந்து ஆராய்ச்சி நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘இந்திய நோயாளிகளின் நலம், உள்நாட்டு அறிவியல், தொழில் மேம்பாடு, நாட்டின் பாதுகாப்பு இவற்றோடு தமிழக விவசாயிகளின் நலனையும் கருத்தில்கொண்டு மத்திய அரசின் மருந்து கொள்முதல் விதிகளை மாற்ற உத்தரவிட வேண்டும். மேலும் தரமற்ற சீன மருந்துப் பொருட்களை நாட்டுக்குள் நுழையும் முன்பாகவே தடுக்க அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்களில் தரப் பரிசோதனை மையங்களை அமைக்க வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகளோடு நபார்டு வங்கியையும் தாமாக முன்வந்து சேர்த்துவிட்டு, அவை பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x