

தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே.தியாகராஜ பாகவதரின் 55-ம் ஆண்டு நினைவு நாளான நேற்று திருச்சியில் உள்ள அவரது கல்லறையில் பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.
ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் என்று அழைக்கப்படும் மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர், 1910-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி மயிலாடுதுறையில் பிறந்தார். திருச்சியில் வளர்ந்த இவர் பள்ளிப் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. இசைக் கச்சேரிகளுக்கு சென்று ரசிப்பதுடன் அந்தப் பாடல்களை அப்படியே பாடும் திறன் பெற்றிருந்தார்.
1934-ம் ஆண்டு பவளக்கொடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடிப்பைத் தொடங்கிய இவர் சொந்தக் குரலிலேயே பாடி, ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டவர். 6 வெற்றிப் படங்கள் உட்பட சுமார் 14 திரைப்படங்களில் நடித்த இவர், உடல் நலம் குன்றிய நிலையில் சென்னை பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 1959-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி மரணமடைந்தார்.
அவருடைய 55-ம் ஆண்டு நினைவு தினமான நேற்று திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் உள்ள கல்லறையில் விஸ்வகர்மா மகாஜன சபையினர் அதன் தலைவர் என்.குமரப்பன் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் விஸ்வகர்மா மகாஜன சபையின் செயலர் எஸ்.சுப்பண்ணா, பொருளர் வெள்ளையன் மற்றும் பொதுமக்கள், சினிமா ரசிகர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், விஸ்வகர்மா அமைப்பினர் கூறுகையில், “3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் ஓடி 3 தீபாவளிகளைக் கண்ட ஹரிதாஸ் படத்தில் நடித்ததன் மூலம் இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்கச் செய்த எம்.கே.தியாகராஜ பாகவதரின் நினைவாக மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.