Published : 25 Jul 2017 12:19 PM
Last Updated : 25 Jul 2017 12:19 PM
அமைச்சர் வளர்மதி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
சீர்மரபினருக்கு எதிராக 30.07.1979-ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணை எண் 1310-ஐ திரும்ப பெற்று மீண்டும் சீர்பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வேண்டும். டி.என்.டி. மக்களுக்கு தனி இடஒதுக்கீடு, மத்திய அரசு டி.என்.டி. (சீர்பழங்குடியினர்) மட்டும் வழங்கும் கல்வி உதவித் தொகை திட்டத்தை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்மரபினர் நலச் சங்கத்தினர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், சீர்மரபினர் என்பதை சீர் பழங்குடியினர் என மாற்ற வேண்டும் என தங்கதமிழ்ச்செல்வன் எம்எல்ஏ சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார்.
ஆனால், இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் தற்போதைய சூழலில் பெயர் மாற்றம் செய்ய முடியாது என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி தெரிவித்தார். அமைச்சரின் இந்தக் கருத்து முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக உள்ளது எனக் கூறி, சீர்மரபினர் நலச்சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்மரபினர் நலச்சங்க பொதுச் செயலாளர் மாரிமுத்து, சீர்மரபினர் நலச்சங்க மகளிரணி தலைவர் தவமணி அம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT