Published : 26 Nov 2014 11:16 AM
Last Updated : 26 Nov 2014 11:16 AM

பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 110 சவரன், 3 கிலோ வெள்ளி திருட்டு: சென்னையில் பட்டப்பகலில் துணிகர சம்பவம்

திருவல்லிக்கேணியில் பெண் உதவி ஆய்வாளரின் வீட்டில் 110 சவரன் நகைகள், 3 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருப்பவர் புவனேஸ்வரி. இவரது வீடு திருவல்லிக்கேணி பார்த்த சாரதி சந்துவில் உள்ளது. புவனேஸ்வரிக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவரது கணவர் அசோக்குமார் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக உள் ளார். திருமணத்துக்குப் பிறகு புவனேஸ்வரி கணவருடன் திருவல்லிக்கேணியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

பார்த்தசாரதி சந்துவில் உள்ள வீட்டில் புவனேஸ்வரியின் தாயார் ராஜேஸ்வரி தனியாக வசிக்கிறார். புவனேஸ்வரி தனது நகைகளை தாயாரின் பொறுப்பில் இந்த வீட்டில்தான் வைத்திருந்தார்.

நேற்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு எதிர் வீட்டில் உள்ள பெண்களுடன் ராஜேஸ்வரி பேச சென்றார். சுமார் ஒன்றரை மணி நேரம் கடந்த பின்னர் ராஜேஸ்வரி மீண்டும் விட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் 2 பீரோக் களில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. பீரோவில் இருந்த 110 சவரன் தங்க நகை கள், 3 கிலோ வெள்ளிப் பொருட் கள், ரூ.10 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தன. வீட்டின் பின்பக்க ஜன்னலை உடைத்து திருடர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஐஸ்ஹவுஸ் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

திருட்டு சம்பவம் நடந்த வீடு இருக்கும் இடத்தில் அருகருகே ஏராளமான வீடுகள் உள்ளன. மக்கள் நடமாட்டமும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

இதனால் இந்த பகுதியைப் பற்றி நன்கு அறிந்த நபர்தான் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின் றனர்.

30 சவரன் திருட்டு

இந்நிலையில் நேற்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பகுதியில் நடந்த மற் றொரு சம்பவத்தில் சபானாகான் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

போலீஸார் சந்தேகம்

பெண் எஸ்.ஐ வீட்டில் நடந்த திருட்டு குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “110 சவரன் நகைகள் திருடப்பட்டதாக சொல்வது பொய்யாக இருக்க வாய்ப்புள்ளது. திருடன் நுழைந்ததாக கூறப்படும் ஜன்னல், மிகச்சிறிய அளவிலேயே உடைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக ஒரு சிறுவன் மட்டுமே நுழைய முடியும். பெண் உதவி ஆய்வாளர் புவனேஸ்வரியின் வீடு இருக்கும் இடம் பார்த்தசாரதி கோயிலுக்கு சொந்தமானது. அந்த இடத்தை காலி செய்ய மறுத்து அவர்கள் குடியிருக்கின்றனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த திருட்டு நடந்துள்ளதாக கூறுவது சந்தேகமளிக்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x