Published : 21 Jul 2017 05:18 PM
Last Updated : 21 Jul 2017 05:18 PM

ஆகஸ்ட் 31-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் 31-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ததுடன், டிசம்பர் இறுதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டார்.

இதற்கிடையே, தேர்தல் ரத்து செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணை 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரியில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மே 14-ம் தேதிக்குள் கண்டிப்பாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

ஆனால், தனி நீதிபதி விதித்த நிபந்தனைகளை முறையாகக் கடைபிடித்து, இந்திய தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய வாக்காளர் பட்டியலை ஆன்லைன் மூலமாக சரிபார்க்க வேண்டி இருப்பதால், ஜூலைக்குள் தேர்தலை நடத்தி விடுவதாக உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்தது. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அதன் வழக்கு விசாரணையில் திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், மாநில தேர்தல் ஆணையம் சார்பில் அரசு வழக்கறிஞர் நெடுஞ்செழியன் ஆகியோர் ஆஜராகினர்.

அப்போது பேசிய வழக்கறிஞர் வில்சன், ''இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மே 14-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தனர். ஆனால் அந்த உத்தரவை தேர்தல் ஆணையம் அமல்படுத்தவில்லை.

தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்ற முடிவில் இருக்கின்றன. உள்ளாட்சி அமைப்புகள் நாட்டின் முதுகெலும்பு ஆகும். ஆனால் அவை தேய்ந்து கொண்டிருக்கின்றன. உள்ளாட்சி அமைப்புகளின் எந்தவொரு அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப் படவில்லை. இதில் தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் கூட்டாக இணைந்து செயல்படுகின்றன. எனவே குறித்த காலக்கெடுவுக்குள் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்'' என வாதிட்டார்.

மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் நெடுஞ்செழியன், உள்ளாட்சித் தேர்தல் குறித்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், ''உச்ச நீதிமன்றமோ, உயர் நீதிமன்றமோ எந்த தடை உத்தரவும் பிறப்பிக்காதபோது, உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவது ஏன்?

வழக்கின் நோக்கமே காலக்கெடு குறித்து நிர்ணயிக்கத்தான். எவ்வளவு காலம்தான் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப் போடுவீர்கள்? ஆகஸ்ட் 31-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவேண்டும். அதற்கான அறிவிப்பாணையை ஜூலை 26-க்குள் வெளியிட வேண்டும்'' என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x