Published : 26 Jul 2017 11:14 AM
Last Updated : 26 Jul 2017 11:14 AM

தமிழகத்தை ஏமாற்றும் ஆடிப்பட்ட மழை: சாகுபடி தொடங்க முடியாமல் விவசாயிகள் ஏமாற்றம்

ஆடிப்பட்ட மழை இந்த ஆண்டு தற்போது வரை பெய்யத் தொடங்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் விவசாயம் பொதுவாக வடகிழக்கு பருவ மழையும் தென் மேற்கு பருவ மழையும் அடிப்படையாக கொண்டது. கடந்த 6 ஆண்டுகளாக தமிழகத்தில் இவ்விரண்டு பரு வமழை காலங்களும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பொய்த்துப் போனது. இந்த ஆண்டு நீண்ட கோடை காலத்துக்குப் பிறகு இந்த ஆடிப்பட்டத்தில் நல்ல மழை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.

பொதுவாக ஆண்டுதோறும் ஜூலை 14-ம் தேதியில் இருந்து ஆடிப்பட்ட மழை ஆரம்பித்து விடும். ஆடிப்பட்டம் மழை ஆடிப் பட்டம் தொடங்குவதற்கு முன்பாக ஒரு மழையும், ஆடிப்பட்டத்தில் விதைத்தபிறகு உயிர் காக்க ஒரு மழையும், 25-ம் நாள் வளர்ச்சிக்கெனவும், 45-ம் நாள் பூப்பதற்கெனவும் 65-ம் நாள் பறிப்பதற்கு முன்பு ஒரு மழையும் பெய்யும்.

ஆடிமாதத்தில் பெய்யும் இந்த மழை தமிழகத்தில் மானாவாரி சாகுபடி பரப்பையும் அதிகப்படுத்தும். கடந்த ஆண்டு இந்தநேரத்தில் ஆடிப்பட்ட மழை பெய்தது. ஆனால், இந்த ஆண்டு தற்போது வரை இந்த ஆடிப்பட்ட மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வேளாண் பொறியாளர் பிரிட்டோ ராஜ் கூறியதாவது: பொதுவாக கேரள மாநிலம், தென்மேற்கு பருவமழையால் அதிகளவு மழை பெறும். கடந்த 5 ஆண்டுகளாக முறையற்ற பருவமழையால் தென்மேற்கு பருவமழை சுமார் 40 முதல் 50 சதவீதம் அம்மாநிலத்தில் குறைந்தது. இதே காலத்தில் தென்மேற்கு பருவமழையால் குறைந்த அளவு மழை பெய்ய வேண்டிய கோவா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில், அதிகளவு மழையை பெற்று வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டிய 14 மாவட்டங்களில் அதிகளவு மழை நாட்களை இந்த ஆடிப்பட்டம் பெறுவது வழக்கம். ஏழு நாட்களாவது மழை பெய்ய வேண்டும். ஆனால், இந்த ஆண்டு பெய்யாததால் ஆடிப்பட்டம் விவசாயமே பொய்த்துப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. பெய்த மழையும், அனைத்து பகுதிகளிலும் சீராக பெய்யவில்லை என்றார்.

ஆழ்துளை கிணறுகளை தவிருங்கள்

தற்போது ஆழ்துளை கிணறுகளில் அதிக குதிரை சக்தியுள்ள மோட்டார்களை பயன்படுத்தி ஊற்று எனப்படும் நீர் தாங்கிகளில் உள்ள நீர், வேகமாக அதிகளவு உறிஞ்சப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைகிறது. தற்போது ஆழ்துளை கிணறு அமைப்பதை தவிர்க்க வேண்டும். பெய்யும் மழை நீரை அந்தந்த நிலங்களில் சேமித்தால் மட்டுமே எதிர்கால விவசாயம் நிலைக்கும்.

ஒவ்வொரு வீடுகளிலும் கூரையில் விழும் மழைநீரை நிலத்தடியில் அமைக்கப்பட்ட தொட்டிகளில் சேமிப்பதுடன் மீதமுள்ள தண்ணீரை மழை நீர் சேகரிப்பு தொட்டிகளில் சேமித்து ஆழ்துளை கிணறுகளை செறிவூட்ட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x