

புதுச்சேரி துணைநிலை ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், '' புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, அம்மாநிலத்தின் நியமன எம்.எல்.ஏ. பதவிகளுக்கு பாஜகவினர் பெயர்களை பரிந்துரை செய்திருப்பதுடன் அவர்களுக்கு பதவிப் பிரமாணமும் செய்து வைத்துள்ளார். இந்த நடவடிக்கை ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதாக அமைந்திருக்கிறது.
இதுவரையில் புதுவையில் நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க ஆளும் அமைச்சரவை பரிந்து செய்து, அந்த பரிந்துரையை மத்திய உள்துறை அங்கீகரித்து நியமனம் செய்யப்பட்டு வந்தது. தற்போது ஆளுநரே பாஜகவினர் பெயர்களை பரிந்துரைத்து, நியமிக்கப்பட்டிருப்பது எதேச்சதிகாரமான செயல்பாடாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஊழல் எதிர்ப்பாளராகவும் லோக்பாலுக்காக போராடுபவராகவும் தன்னை காட்டிக் கொண்ட புதுச்சேரி ஆளுநர் மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்று நிரூபணமாகியுள்ளது. ஆளுநரை தங்கள் அரசியர் நோக்கிற்காக பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது என்பதும் அம்பலமாகியுள்ளது.
இந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டுமென்றும், துணைநிலை ஆளுநரை திரும்பப் பெற வேண்டுமென்றும் வலியுறுத்தி புதுச்சேரியில் இடதுசாரி, ஜனநாயக கட்சிகள் ஜூலை 8-ல் முழுஅடைப்புக்கு அழைத்துள்ளன. அந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆதரவு தெரிவிக்கிறது. மேலும் எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை ரத்து செய்வதோடு, எதேச்சதிகாரமாக செயல்படும் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.