Published : 05 Jul 2017 08:26 AM
Last Updated : 05 Jul 2017 08:26 AM

ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்

கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், அவரது கணவர் அஸ்வினுக்கும் பரஸ்பரம் விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

சவுந்தர்யாவுக்கும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

கடந்த சில மாதங்களாக சவுந்தர்யாவுக்கும், அவரது கணவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், சவுந்தர்யாவும், அவரது கணவர் அஸ்வினும் பரஸ்பரம் விவாகரத்து கோரி கடந்த 2016 டிசம்பர் மாதம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில், ‘‘இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பல மாதங்களாக பிரிந்து வாழ்கிறோம். குடும்பப் பெரியவர்கள் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியும் எங்களுக்குள் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்துப் பெற்று பிரிந்து வாழ விரும்புகிறோம். இதற்காக சொத்து மற்றும் குழந்தை தொடர்பான பிரச்சனைகளிலும் சுமூகமாக பேசி தீர்த்து விட்டோம். எனவே எங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டும்’’ என கோரியிருந்தனர்.

இருவரும் கடந்த ஜூன் 23-ம் தேதி சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி மரியா கிளட் முன்பாக ஆஜராகி, பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்து செல்வதாக தெரிவித்தனர். இந்நிலையில், நீதிபதி மரியா கிளட் நேற்று சவுந்தர்யா மற்றும் அஸ்வினுக்கு பரஸ்பரம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x