Published : 27 Jul 2017 08:49 AM
Last Updated : 27 Jul 2017 08:49 AM

குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் உள்ளது: என்னை மிரட்டவே பால் நிறுவனங்கள் வழக்கு - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பதில் மனு

சென்னை

பால் கலப்படம் தொடர்பாக தனி யார் நிறுவனங்கள் மீதான எனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளது. என்னை மிரட்டவே எனக்கு எதிராக அந்த நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தனியார் நிறுவனங்களின் பாலில் ரசாயன கலப்படம் உள்ள தாக கடந்த மே மாதம் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஊடகங் களுக்கு அளி்த்த பேட்டியில் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஹட்சன் அக்ரோ, டோட்லா, விஜய் ஆகிய பால் நிறுவனங்கள் சார்பில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், எங்களது நிறுவனம் குறித்து ஆதாரமின்றி குற்றச் சாட்டுக்களை தெரிவிக்க அமைச் சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் எங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு தலா ரூ. ஒரு கோடியை இழப்பீடாக வழங்க அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தனர்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன், ‘‘பால்வளத்துறை அமைச்சர் ஆதாரமின்றி தனியார் பால் நிறுவனங்கள் குறித்து பேசக்கூடாது என உத்தரவிட்டு, இதுதொடர்பாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பதிலளிக்க உத்தரவி்ட்டிருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் பால் கலப்படத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. நான் ஒரு எம்எல்ஏ என்ற முறையிலும், அமைச்சர் என்ற முறையிலும் பால் கலப்படம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் கருத்து தெரிவித்தேன். மேலும் நான் ஒரு பொது ஊழியர் என்ற முறையில் எனது கடமையை செய்துள்ளேன். இதற்கு முழு உரிமை உள்ளது. இதற்காக என் மீது சிவில் வழக்கு தொடர முடியாது. மேலும் என்னை மிரட்டும் விதமாகவே தனியார் பால் நிறுவனங்கள் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளன. என் மீது வழக்குத் தொடர்ந்துள்ள மூன்று நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருட்களும் தரம் குறைந்தவை தான். குறிப்பாக டோட்லா நிறுவனத்தின் பாலில் ரசாயனக் கலப்படம் உள்ளது என்பதால் தான் தமிழக அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை அந்த நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளது. அதுபோல விஜய் டைரிஸ் நிறுவனத்தின் பாலும் தரம் குறைந்தவை தான். எனது புகாருக்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் நான் கூறிய கருத்துகளின் மூலமாக அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாக அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன. அதற்கான ஆதாரங்களை அவை தாக்கல் செய்யவில்லை. ஒரு அமைச்சர் என்ற முறையில் எனக்கு எதிராக இந்த வழக்கை தொடர்ந்துள்ளதன் மூலமாக இந்த பால் நிறுவனங்கள் தங்களின் தவறை மறைக்க நினைக்கின்றன. எனவே எனக்கு எதிராக தலா ரூ. ஒரு கோடி இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x