Published : 16 Dec 2013 12:00 AM
Last Updated : 16 Dec 2013 12:00 AM

பால் கொள்முதல் விலை: ஜன.1 முதல் போராட்டம் - பால் உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு

பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தவேண்டும், கோமாரி நோயால் உயிரிழந்த மாடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் காலவரையற்ற பால் நிறுத்தப் போராட்டம் மற்றும் கால்நடைகளுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநிலத் தலைவர் செங்கோட்டுவேல் தெரிவித்தார்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் மாநில செயற் குழுக் கூட்டம் சேலத்தில் நடந்தது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் செங்கோட்டுவேல் தலைமை வகித்தார். தமிழகம் முழுவதும் இருந்து பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் மாநிலத் தலைவர் செங்கோட்டுவேல் நிருபர்களிடம் கூறியதாவது:

பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்த நட வடிக்கை எடுக்க வேண்டும். பசும்பாலுக்கு 20 ரூபாயிலிருந்து 10 ரூபாய் கூடுதலாக உயர்த்தி 30 ரூபாயாகவும், எருமைப் பாலுக்கு 26 ரூபாயில் இருந்து 15 ரூபாய் உயர்த்தி 41 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கவேண்டும். கடந்த ஓராண்டு காலமாக முதல்வர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் விவசாயிகளை சந்திக்காமல் புறக்கணித்து வருவது வேதனையை அளிக்கிறது.

கோமாரி நோயால் தமிழகத்தில் உயரிழந்த மாடுகளுக்கு அதன் மதிப்பிற்கேற்ப உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் தமிழக அரசு இதுவரை செவிசாய்க்காமல் உள்ளது. எனவே, இந்த இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து வரும் ஜனவரி 1ம் தேதி முதல் காலவரையற்ற பால் நிறுத்த போராட்டம் நடத்த முடிவெடுத் துள்ளோம். கோமாரி நோய் தாக்கி யதற்கு தமிழக அரசே காரணம். கடந்த இரண்டு ஆண்டுகளாக மாடுகளுக்கு தடுப்பு ஊசி போட்டிருந்தால் தற்போது இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x