Published : 14 Apr 2014 10:44 AM
Last Updated : 14 Apr 2014 10:44 AM

அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாமல் இருந்த நோயாளி: கடந்த ஒரு மாதமாக மூளை நரம்பியல் சிகிச்சை

சென்னை அரசு பொது மருத்துவமனையில் அடையாளம் தெரியாத நிலையில் கடந்த ஒரு மாதகால மாக சிகிச்சை பெற்று வந்த நபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவரைச் சந்திக்க அவரது உறவினர்கள் சென்னைக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.

கடந்த மார்ச் 2-ம் தேதி மாமல்லபுரத்தில் அடிபட்ட நிலையில் இருந்த ஒருவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்பு, அங்கிருந்து மார்ச் 3-ம் தேதி காலை 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டுவரப்பட்டார். அவரது இரத்த அழுத்தமும் நாடி துடிப்பும் குறைவாக இருந்தது. மூளையின் இருபுறங்களிலும் இரத்தக் கட்டு ஏற்பட்டிருந்தது.அதற்காக அவருக்கு நரம்பு சம் பந்தப்பட்ட இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. கல்லூரி மாணவர்கள், தன்னார் வலர்கள் ரத்த தானம் அளித்தனர். சிகிச்சைக்கு பிறகும் அவருக்கு முழுமையாக சுயநினைவு திரும்பவில்லை.

அவர் யார் என்று தெரியாததால் அவரிடம் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மருத்துவர்கள் பேசினர். இரண்டு வாரங்களுக்கு பிறகு ஹிந்தியில் பேசியதற்கு பதிலளித்த அவர், தனது பெயர் ஹரி என்றும் தான் ஒடிசாவைச் சேர்ந்தவர் என்றும் கூறினார்.

அதை தவிர வேறு எந்த தகவல் களும் கூறாததால், நோயாளியைப் பற்றிய தகவல்களை அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ராஜா விக்னேஷ் கடந்த 6-ம் தேதி தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அவரது நண்பர் நரம்பியல் நிபுணர் மரியானோ அண்டோ புரூனோ என்பவரின் பேஸ்புக் நண்பர்களில் ஒருவரான கே.ஜேனா, ஹரியின் குடும்பத்தை கடந்த 12-ம் தேதி கண்டுபிடித்துள்ளார். தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் சென்னைக்கு விரைந்து கொண்டிருக்கின்றனர்.

நோயாளிக்கு மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் தலைவர் மருத்துவர் பேராசிரியர் மகேஸ்வரன் தலைமையிலான குழு அறுவை சிகிச்சை செய்தது. இது குறித்து அந்த குழுவிலிருந்த மருத்துவர் ராஜா விக்னேஷ் கூறியதாவது:

அரசு மருத்துவமனைகளில் நன்கு படித்த மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்றும், ஒரு நபரை யார் என்றே தெரியாமல் ஒரு மாதமாக எந்த செலவுமின்றி அவரை கவனிக்கிறார்கள் என்றும் மக்களுக்கு தெரிய வேண்டும் என்று தான் நான் அதை பேஸ்புக்கில் பகிர்ந்தேன்.

தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைகளுக்கு 40 லட்சம் வரை செலவாகியிருக்கும். ஒடிசா விலிருந்து அவர்களது உற வினர்கள் என்று சொல்லகூடியவர்கள் வந்த பிறகு, இவரை பார்த்த பிறகு தான் இவரது அடையாளத்தை உறுதி செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x