Last Updated : 02 Jan, 2016 10:44 AM

 

Published : 02 Jan 2016 10:44 AM
Last Updated : 02 Jan 2016 10:44 AM

மரங்களே கரைகளின் காவலர்கள்: ஆராய்ச்சியாளர் டி.நரசிம்மன் நேர்காணல்

“நீர்நிலைகளை காட்சிப் பொருளாக ரசிக்கின்ற காலத்தில் இருக்கும் நமக்கு அதன் கரைகளில் உள்ள மரங்களைப் பற்றியும் அதன் பண்புகள் குறித்தும் தெரியாமல் போனது ஆச்சரியமல்ல. நீர் நிலைகளின் கரைகளில் இருக் கும் மரங்களை காப்பதும், புதி தாக மரங்களை நடுவதன் மூலம் எதிர்கால சேதங்களை தவிர்க்க லாம்” என்கிறார் தாவரவியல் ஆராய்ச்சியாளர் டி.நரசிம்மன்.

சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் (எம்சிசி) தாவரவியல் இணை பேராசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும் இருக்கும் டி.நரசிம்மன், கடந்த 20 ஆண்டு களாக தாவரங்களையும், மரங் களையும் ஆராய்ந்து வருகிறார். மண்ணுக்கேற்ற மரங்கள் எவை, கடற்கரையில் நட வேண்டிய மரங்கள் என்னென்ன, அழிந்து போன தாவர குடும்பத்தைச் சேர்ந்த மரங்களை மீண்டும் பூமியில் துளிர்விட செய்வது எப்படி, மரத்துக்கும் நீருக்குமான தொடர்பு என்ன, என்று நீளுகின்றன நரசிம்மனின் ஆய்வுகள்.

இயற்கையோடு இயைந்த வாழ்வை பெற்ற நரசிம்மன் ‘தி இந்து’விடம் பேசியதாவது:

இயற்கையின் தொடக்கம் தாவரங்களிலிருந்துதான் ஆரம் பிக்கிறது. எனவே, நானும் எனது குழுவும் மரங்களை கணக்கெடுக்கும் பணியைத்தான் முதலில் தொடங்கினோம். வாகன நெரிசலும், பரபரப்பும் நிறைந்த சென்னையில் 2 லட்சம் மரங்கள் உள்ளன. அவை அனைத்தும் 20 முதல் 50 ஆண்டுகள் பழமை யானவை. இந்த உண்மை பெரும் பாலான சென்னை வாசிகளுக்குத் தெரியாது. இதனை எங்கள் கணக்கெடுப்பின் மூலம் வெளிக் கொணர்ந்தோம். அடையாறு பூங்காவை மறு சீரமைப்பு செய் ததில் எங்கள் குழு முக்கியப் பங் காற்றியது.

இன்றைக்கு ஃபேஷன் என்கிற பெயரில் வெளிநாட்டு தாவரங்களை நம்மூரில் முளைக்கச் செய்யும் அபத்தங்கள் அரங்கேறி வருகின்றன. இது இயற்கையின் இயக்க சங்கிலிக்கு எதிரானது. இதனால் மண் வளம், காற்று போன்றவற்றில் மாறுதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. செல்ல நாய்க் குட்டிக்கு என்ன ஃப்ளேவரில் சாப்பாடு கொடுக்க வேண்டும் எனத் தெரிந்த நமக்கு, எந்த மண்ணில் எந்த மரத்துக்கான விதை துளிர்க்கும் என்பது தெரியாமல் போய்விட்டது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்வியல் தத்துவங்களை வகுத்த ஒரு இனம், இன்றைக்கு இஎம்ஐ கட்டுவதற்காக தனது வாழ் நாளையே போராட்டக்களமாக மாற்றிக்கொண்டுவிட்டது.

இயற்கைக்கும் மனிதனுக்கு மான தொடர்புகள் அற்றுப்போய் கொண்டிருப்பதன் விளைவா கவே இயற்கையின் சிறு இயக்கம் கூட நமக்கு பேரிடராகப்படுகிறது. எனவே, மண்ணுக்கேற்ற மரங் களை நட வேண்டும் என்ற விழிப் புணர்வை ஏற்படுத்த ஒரு இயக்க மாக செயல்பட்டு வருகிறோம்.

தாவரங்களுக்கும், நீருக்கும் பெரும் தொடர்பு உள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சமீபத்தில் மழை பெய்தபோது, பல ஏரிகளும், குளங்களும் உடைப்பெடுத்தன. நவம்பரின் மத்தியில் பெய்த பரவலான மழைக்கே தாம்பரத்தைச் சுற்றிய 5 ஏரிகள் உடைப்பெடுத்து சாலைகளில் வெள்ளம் ஓடியது. இதையடுத்து, டிசம்பர் 1-ம் தேதி நடந்ததை யாரும் மறக்க முடியாது.

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத் துக்கு காரணம் ஆக்கிரமிப்பு என்று மட்டுமே நாம் பேசுகிறோம். ஆனால், அந்த ஆக்கிரமிப்புக்கான காரணங்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அப்படியே பேசினா லும், அரசையும், ரியல் எஸ்டேட் காரர்களையும் மேலோட்டமாக வசைபாடுகிறோம். ஆக்கிரமிப்பு கள் ஏற்பட்டதில் அவர்களுக்கு பங்கிருந்தாலும், நீர்நிலைகளைச் சுற்றியிருந்த மரங்கள் அழிக்கப் பட்டதுதான், பிரச்சினைக்கான மூல காரணமாகும்.

நீர் நிலைகளை உருவாக்கிய நமது முன்னோர்கள், அவற்றின் கரைகளை பலப்படுத்து வதற்காக பனை மரம், ஈச்சை மரம், நீர் கடம்பு மரம் போன்றவற்றை நட்டனர். இதனால் நீர்நிலைகளின் கரைகள் இயற்கையாகவே பலமானதாக இருந்தன.

அப்படி நடப்பட்ட மரங் கள் பல இன்றைக்கு அழித் தொழிக்கப்பட்டுவிட்டன. மரங் கள் இருந்த இடத்தில் கான்கிரீட் கூடுகள் துளிர்த்ததன் விளைவே, சிறு துளி, பெரு வெள்ளமானது; கன மழை, கடல் போல சேதத்தை தந்தது.

எனவே, நீர்நிலைகளை பரா மரிக்க நினைப்பவர்கள் அவற்றை சுற்றியுள்ள மரங்களுக்கு மட்டு மல்ல, சிறு புல்லுக்கும் சேதத்தை உண்டாக்கக் கூடாது. அப்படி செய்தால், வெள்ளத்துக்கான மதகுகளை நாமே திறந்து விடுவதற்கு சமமாகும்.

எனவே, எதிர்கால பேரிடர்களை தவிர்க்க, நீர்நிலைகளை ஒட்டியுள்ள மரங் களை பேணுவதும், புதிதாக மரங்களை நடுவதும் இன்றைய அவசிய தேவை என்கிறார் நரசிம்மன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x