Published : 03 Jan 2016 06:45 PM
Last Updated : 03 Jan 2016 06:45 PM

சென்னையை வேறு சென்னையாக மாற்றுவோம்: நடிகர் கார்த்தி உறுதி

சென்னையை வேறு சென்னையாக மாற்றுவோம் என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலை பாதுகாப்பு குறித்த 2 நாள் கருத்தரங்கில் நடிகர் கார்த்தி கலந்துகொண்டார்.

‘மானுடம் வென்றது’ என்ற பொருளில் கருத்தரங்கில் கார்த்தி பேசியதாவது:

''சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது நான் ஹைதராபாத்தில் இருந்தேன். சென்னை வந்தபோது தான், பாதிப்புகள் தெரிந்தது.

ராணுவம் வந்து மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியவுடன், அடுத்த தேவை நிவாரணம் என்பதை உணர்ந்தேன். நண்பர்கள் பலர் போனில் தொடர்புகொண்டு, நிவாரணப் பொருட்களை அனுப்பினால், அதை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க முடியுமா என கேட்டனர். எனது நண்பர்கள், நடிகர் விஷால் உள்ளிட்ட பல்வேறு திரை துறை நண்பர்கள், மருத்துவ நண்பர்கள், கல்லூரி மாணவர்கள் மூலமாக நிவாரணப் பொருட்களை வழங்கினோம்.

இந்த நிவாரணத்தில் நாங்கள் கற்ற படிப்பினை என்னவென்றால், ஒவ்வொரு நாளும், பாதிக்கப்பட்டவர்களின் தேவை மாறிக்கொண்டே இருந்தது தான். முதல் நாள் தேவைப்பட்ட குடிநீர் அடுத்த நாள் தேவைப்படவில்லை.

மேலும், பல இடங்களுக்கு சென்று நிவாரணம் வழங்குவதை தவிர்த்து, ஒரு இடத்தை மட்டும் கவனிக்க வேண்டும் என்ற படிப்பினையையும் கற்றுக்கொண்டோம். அதற்கு ஒருங்கிணைப்பும் தேவை என்பது தெரிந்தது. தொழில்நுட்பமே வேலை செய்யாமல் போனபோது, ஒவ்வொருவரும் வேலை செய்தது தான் பெரிய உதவியாக இருந்தது.

அடுத்து நாம் மேற்கொள்ளும் நடவடிக்கையை ஒரு திட்டமாக எடுத்துக்கொண்டு, பணிகளை பிரித்துக்கொண்டு செயல்படுத்த வேண்டும். அதில் ஈடுபட திரைத்துறை நண்பர்களை அழைத்து வருகிறேன். நிச்சயம் சென்னையில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு மேம்படுத்தி காட்டுவோம் என்று நாம் உறுதியேற்போம். சென்னையை வேறு சென்னையாக மாற்றுவோம்'' என்று கார்த்தி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x