Published : 23 Jan 2014 12:00 AM
Last Updated : 23 Jan 2014 12:00 AM

தர்மபுரி: கழுதையை கைது செய்த பென்னாகரம் காவல் துறை

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் விபத்துக்குக் காரணமான கழுதையைப் பிடித்த காவல்துறையினர், அதை காவல் நிலையத்தில் அடைத்து வைத்தனர்.

பென்னாகரம் வட்டம், ரங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன் (35). நேற்று காலை மோட்டார் சைக்கிளில் பென்னாகரம் சென்றார். பென்னாகரம் காவல் நிலையம் அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே ஓடி வந்த கழுதையின் மீது மோதி, கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த மாதேஸ்வரன் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மலைக் கிராமங்களுக்கு சுமைகளை எடுத்துச் செல்வது உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக பென்னாகரம் பகுதியில் பலர் கழுதைகளை வளர்க்கின்றனர். இவை பெரும்பாலான நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இவற்றால் அடிக்கடி விபத்துக்கள் நேரிடுகின்றன. அப்போது கழுதையின் உரிமையாளரை அழைத்து, காவல் துறையினர் எச்சரிக்கின்றனர்.

மேலும், விபத்தை ஏற்படுத்திய கழுதையைப் பிடித்து, காவல் நிலைய வளாகத்தில் கட்டி வைக்கின்றனர். வழக்கு பயத்தில் கழுதையைச் சொந்தம் கொண்டாடி, உரிமையாளர் காவல் நிலையத்துக்குச் செல்வதில்லை. ஓரிரு நாட்களுக்குப் பிறகு வேறுவழியின்றி கழுதையை காவல் துறையினர் விடுவித்து விடுவர்.

இதேபோல், மாதேஸ்வரனை விபத்தில் சிக்க வைத்த கழுதையை பென்னாகரம் காவல் துறையினர் பிடித்து, காவல் நிலைய வளாகத்தில் கட்டி வைத்தனர். வழக்கம்போல் கழுதையின் உரிமையாளர் அங்கு வரவில்லை.

உரிமையாளர்களுக்கு காவல் துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்தால்தான் கழுதைகள் மூலம் விபத்துக்கள் நிகழ்வது குறையும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x