Last Updated : 21 Dec, 2013 12:00 AM

 

Published : 21 Dec 2013 12:00 AM
Last Updated : 21 Dec 2013 12:00 AM

மெட்ரோ ரயிலுக்கு மேலும் ஒரு பணிமனை - விம்கோ நகர் அல்லது மீனம்பாக்கத்தில் அமைக்க திட்டம்

மெட்ரோ ரயில்களுக்காக மேலும் ஒரு பணிமனை (டெப்போ) அமைக்கப்பட உள்ளது. இதை மீனம்பாக்கம் அல்லது விம்கோ நகரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. முதலாவது வழித்தடம், வண்ணாரப்பேட்டையில் இருந்து மீனம்பாக்கம் வரையும் இரண்டாவது வழித்தடம், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரையும் செல்கிறது.

முதல்கட்டமாக அடுத்த ஆண்டு ஜூனில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே பறக்கும் பாதையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஒரு பணிமனை

ஒரு வழித்தடத்துக்கு ஒரு பணிமனை அமைக்க வேண்டும். தற்போது கோயம்பேட்டில் 115 ஏக்கர் பரப்பளவில் உலகத் தரத்தில் மெட்ரோ ரயில் பணிமனை அமைக்கப்பட்டு வருகிறது. 2-வது பணிமனைக்கான இடத்தைத் தேர்வு செய்வதில் மெட்ரோ ரயில் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மீனம்பாக்கம் அல்லது விம்கோ நகரில் புதிய பணிமனை அமைய லாம் என தெரிகிறது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் வரை 8 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதையை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் அறிக்கை தமிழக அரசுக்கு ஏற்கெனவே அனுப்பப் பட்டுவிட்டது. கோயம்பேட்டில் ஒரு பணிமனை அமைக்கப்படுகிறது. மற்றொரு பணிமனை அமைப் பதற்காக மீனம்பாக்கம் அல்லது விம்கோ நகரில் இடத்தை தேர்வு செய்து வருகிறோம்.

20 ஏக்கர் நிலம்

மீனம்பாக்கத்தில் 20 ஏக்கர் நிலம் தேர்வு செய்து வைத்திருக்கிறோம். திரிசூலம் ரயில் நிலையத்துக்கும் ஜி.எஸ்.டி. ரோட்டுக்கும் இடையே (விளையாட்டு மைதானம்) அமைந் துள்ள அந்த இடம், பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமானது. எனவே, அந்தத் துறையிடம் நிலத்தைக் கேட்டுப் பெற முயற்சி நடக்கிறது.

அந்த இடம் கிடைக்காவிட்டால், திருவொற்றியூரை அடுத்துள்ள விம்கோ நகரில் பணிமனை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. திருவொற்றியூரில் பணிமனை கட்டுவதற்குத் தேவையான இடம் இல்லை. அதனால் விம்கோ நகரில் மெட்ரோ ரயில் பணிமனை அமைத்து, மெட்ரோ ரயில்களை அங்கிருந்து இயக்கும் திட்டம் உள்ளது. விம்கோ நகரில், மெட்ரோ ரயில் பணிமனை அமைப்பதற்கு தேவையான நிலம் இருக்கிறது.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x