

வருங்கால வைப்புநிதி திட்டத்தில் சேராத நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் சேர 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு முகாம் நடைபெற்று வருவதாக தொழிலாளர் வருங் கால வைப்புநிதியின் சென்னை மண்டல ஆணையர் சலீல் சங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தொழிலாளர் சேர்க்கை முகாம் 2017 இம்மாதம் 1 ம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 31 ம் தேதி வரை நடைபெறும். 20 தொழி லாளர்களுக்கு மேல் உள்ள தொழில் நிறுவனங்கள் தொழி லாளர் வருங்கால வைப்புநிதித் திட்டத்தில் சேராத பட்சத்தில் அந்த நிறுவனங்களுக்கு இத்திட்டத்தில் சேர இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
2009 ம் ஆண்டு ஏப்ரல் முதல் 31-12-2016 வரை வருங்கால வைப்புநிதியில் சேரத் தகுதியான, ஆனால் சேராத தொழிலாளர்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உரிய படிவத்தின் மூலம் அத் தொழிலாளர்களை வருங்கால வைப்பு நிதி உறுப்பினராக தகுதியாகும் தேதியைக் குறிப்பிட்டு தகுந்த படிவத்தில் விண்ணப்பித்து உறுப்பினராக சேர்க்கலாம்.
ஒரு தொழிலாளரை உறுப்பின ராகச் சேர்த்தபின் அந்த நிறுவனதாரர் அவர் பங்கையும் தொழிலாளர் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பங்கையும் வட்டி மற்றும் சேதத் தொகையையும் 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.
தொழிலாளர் பங்கை அவரது சம்பளத்திலிருந்து நிறுவனதாரர் பிடிக்கவில்லை என்றால் அப் பங்கை அவர் கட்டத் தேவை யில்லை. சிறப்பு முகாம் வாயிலாக சேர்க்கப்பட்ட தொழிலாளர்களின் பங்குக்கான அபராதத் தொகையாக நிறுவனத்திடமிருந்து ஏற்கெனவே கட்டாத வருடத்துக்காக ரூ.1 மட்டும் வசூலிக்கப்படும். சென்னையில் உள்ள 3 மண்டல அலுவலகங்களில் மொத்தம் 22,000 நிறுவனங்கள் தொழிலாளர் வருங்கால வைப்புநிதித் திட்டத்தில் இணைந்துள்ளன. ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து தொழிலாளர் வைப்புநிதி மற்றும் ஓய்வு ஊதியப் பயன்களை பெறுவதற்காகவே தொழில் நிறுவனங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இந்த சிறப்புத் திட்டத்தின் வாய்ப்பைப் பயன்படுத்த தவறிய நிறுவனதாரர்கள் பின்னர் வரும் நாட்களில் வருங்கால வைப்புநிதிப் பிரிவுகளுக்கு மாறாகச் செயல்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் வைப்புநிதிச் சட்டப்பிரிவின் கீழ் சிறைவாசம் மற்றும் அபராதங் களுக்கு உட்படுத்தப்படுவர். பிரதம மந்திரி வேலைவாய்ப்பு ஊக்கத் தொகைத் திட்டம் (பி.எம்.ஆர்.பி.ஒய்) 9.08.2016 முதல் 2019-20 ஆண்டு வரை அமலில் இருக்கும். நிறுவனதாரர் பங்கான 8.33 சதவீதத்தை மத்திய அரசே ஏற்கும்.
தொழிலாளர் வைப்புநிதித் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் அனைத்து தொழிலாளர்களும் தங்களது பயன்களை துரிதமாகப் பெற்றுக்கொள்ள ஏதுவாக ஆதார் எண்ணைக் கட்டாயம் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு சலீல் சங்கர் கூறினார்.