Published : 01 May 2014 10:31 AM
Last Updated : 01 May 2014 10:31 AM

தமிழக காங்கிரஸின் புதிய தலைவர் திருநாவுக்கரசர்?

தமிழக காங்கிரஸின் புதிய தலைவராக திருநாவுக்கரசரை, ராகுல் காந்தியின் ஆதரவுடன் நியமிக்க அக்கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காங்கிரஸ் கட்சி சார்பில், மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் தயங்கி ஒதுங்கிய நிலையில் வேட்பாளர்களை வலைவீசித் தேட வேண்டிய நிலை ஏற்பட்டது. தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர்களின் கோஷ்டிப் பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க கட்சி மேலிடம் தற்போது தலைமையில் இருந்து அடிமட்ட நிர்வாகிகள் வரை பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள உள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் ‘தி இந்து’ செய்தியாளரிடம் கூறியது:

காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் காணாமல் போய்விட்டது. தேர்தலில் நிற்க வேட்பாளர்களே கிடைக்கவில்லை என்ற நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட சீட் கேட்டு மற்ற தமிழக காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் திருநாவுக்கரசர்.

பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அடுத்த நிலையில் இருக்கும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடும் சிவகங்கை தொகுதியில் அதிருப்தி காரண மாக பிரச்சாரம் செய்யாமல் சோனியாவும், ராகுலும் புறக்கணித்தனர். இந்நிலையில், ராமநாதபுரத்துக்கு ராகுல் காந்தியை பிரச்சாரம் செய்ய அழைத்துவந்து கட்சி மேலிடத்தில் தனக்கு இருக்கும் செல்வாக்கை திருநாவுக்கரசர் நிரூபித்தார்.

காங்கிரஸ் தொண்டர்களின் இல்ல விழாக்கள் மட்டும் இன்றி யார் கூப்பிட்டாலும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பவர். சுருக்கமாகச் சொன்னால் எந்த கோஷ்டியையும் சாராமல் மக்கள் செல்வாக்குடன் திகழ்பவர்.

இதனால்தான் கட்சியையும் தாண்டி, தமிழக அரசியல் தலைவர்கள் அனைவராலும் விரும்பக் கூடியவராக திருநாவுக்கரசர் உள்ளார். எனவே திருநாவுக்கரசர் தமிழக காங்கிரஸின் புதிய தலைவராகக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x