Last Updated : 25 Jul, 2016 10:07 AM

 

Published : 25 Jul 2016 10:07 AM
Last Updated : 25 Jul 2016 10:07 AM

மூடப்பட்ட மதுக்கடைகளால் ஏற்பட்ட ரூ.1,500 கோடி இழப்பை சரிகட்ட விற்பனையை அதிகரிக்க வேண்டும்: மாவட்ட கலால் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

மூடப்பட்ட மதுக்கடைகளால் ஏற்பட்ட ரூ.1,500 கோடி இழப்பை சரிகட்ட விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்று மாவட்ட கலால் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. மேலும், கோயில், பள்ளிகளுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

மதுக்கடைகளின் நேரத்தை குறைத்ததாலும் 500 கடைகளை மூடியதாலும் அரசுக்கு சுமார் ரூ.1,500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக பட்ஜெட் உரை யில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில், மூடப்பட்ட கடைகளால் ஏற்படும் வருவாய் இழப்பை சரிகட்ட வேண்டும் என்று மாவட்ட கலால் அதிகாரிகளை டாஸ்மாக் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூடியதாலும், நேரத்தை குறைத்ததாலும் சுமார் ரூ.1,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

டாஸ்மாக் வருவாய் குறித்து விவாதிப்பதற்காக மாவட்ட கலால் துறை அதிகாரிகள் கூட்டம், கலால் துறை ஆணையர் தலைமையில் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் மூடப்பட்ட மதுக்கடைகளால் ஏற்படும் வருவாய் இழப்பை சரிகட்டுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

தற்போதுள்ள கடைகளின் மூலம் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், மதுக்கடைகள், மதுக்கூடங் களுக்கு (பார்) மாவட்ட, வட்ட கலால் துறை அதிகாரிகள் முறையாக ஆய்வுக்கு செல்ல வேண்டும், விற்பனை குறைகிற இடங்களில் உள்ள பிரச்சினை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வாய்மொழியாக அறிவுறுத்தப்பட்டது.

மேலும், மூடப்பட்ட கடைகளால் ஏற்படும் இழப்பை சரிகட்டும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்பேரில் மாவட்ட கலால் அதிகாரிகள் அந்தந்த வட்டார டாஸ்மாக் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். இதையடுத்து டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு ஆய்வுக்கு செல்வார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x