Published : 11 Nov 2014 08:31 AM
Last Updated : 11 Nov 2014 08:31 AM

ஓ.பன்னீர்செல்வம் வேண்டாவெறுப்பாக செயல்படுவது கவலை அளிக்கிறது: பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

‘ஒ.பன்னீர்செல்வம் வேண்டா வெறுப்பாக முதல்வராகச் செயல் படுவது கவலை அளிக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் நேற்று பழநியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராஜேந்திர சோழனின் 1000-வது முடி சூடிய ஆண்டு விழா தொடர்பாக பேரணி நடத்திய 36 இடங்களில் 40,000 ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், பாஜக நிர்வாகி களைக் கைது செய்தது கண்டிக் கத்தக்கது. தமிழகத்தில் எல்லாமே அரசியலாக்கப்படுகிறது.

தூக்குத் தண்டனையில் இருந்து தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுக்கு, எந்தெந்த வகையில் அழுத்தம் கொடுக்க முடியுமோ அந்தந்த வகையில் பாஜக அரசு அழுத்தம் கொடுத்துவருகிறது.

மீனவர் பிரச்சினையில் பாஜக அரசை விமர்சிக்கும் காங்கிரஸ் தலைவர்கள், அவர்களது ஆட்சி நடக்கும் கேரளத்துக்குச் சென்று பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டினால், தமிழகத்தில் 55 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிக்கும் எனக்கூறி அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

காங்கிரஸில் இருந்து விலகிய ஜி.கே.வாசன், திராவிடக் கட்சி களுக்கு நாங்கள்தான் மாற்று என்கிறார். காங்கிரஸும், ஜி.கே.வாசனும் கட்சியின் சொத்துப் பிரச்சினைக்காக சண்டை போட்டுக்கொள்கின்றனர்.

மற்றொரு திராவிட கட்சி, படத்தை அகற்றுவதற்காக போராடு கிறார்கள். இன்னொரு திராவிடக் கட்சி ஊழல் கட்சியாகிவிட்டது. மக்கள் பிரச்சினையில் இவர் களுக்கு அக்கறை இல்லை. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அதனால், இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாற்று பாஜக மட்டுமே. இளைஞர்கள், பெண் களை அணிஅணியாக ஈர்க்கும் இயக்கமாக பாஜக உருவெடுத் துள்ளது. தமிழகத்தில் ஒரு கோடி பாஜக உறுப்பினர்களை சேர்ப்போம். மாநிலத்தில் மோடி யின் ஆட்சியை அமைப்போம்.

சட்டம், ஒழுங்கு சீர்குலைவு

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதினால் பிரச்சினை தீர்ந்துவிடும் என நினைக்கிறார். ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் முதல் வராக முடியாது என்பது சட்டம். அதனால், முதல்வர் பதவியை விட்டு இறங்கியவர்கள், இனி ஒருபோதும் முதல்வராக முடியாது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நிலைமை அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

பால் விலையை அரசும், தனியாரும் போட்டிபோட்டு உயர்த்துகின்றன. விவசாயிகளுக்கு கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என்பது பாஜகவுக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதற்கு பொதுமக்கள் முதுகில் விலை உயர்வை ஏற்றக்கூடாது. கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதில் பாஜகவுக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை.

ரயில்வே திட்டங்களில் தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை. சென்னை ராயபுரம் ரயில் நிலை யத்தை ரயில்வே முனையமாக மாற்ற, தமிழகத்துக்கு இருமுறை ரயில்வே அமைச்சர் வந்து சென்றுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x