Last Updated : 05 Sep, 2016 10:45 AM

 

Published : 05 Sep 2016 10:45 AM
Last Updated : 05 Sep 2016 10:45 AM

தமிழக இளைஞரை மலேசியாவில் எரித்துக் கொல்ல முயற்சி? - காயங்களுடன் ஊர் திரும்பியவருக்கு முதல்வர் உதவ வேண்டுகோள்

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(32). இவரது மனைவி பெரியாச்சி(30), மகன் முனீஸ்வ ரன்(6), மகள் முனீஸ்வரி(5). 2014-ல் மலேசியா சென்ற கண்ணன், எரிவாயு சிலிண்டர் விநியோக ஏஜென்சியில் வேலை செய்தார். கடந்த ஜூலை 19-ம் தேதி ஏஜென்சி உரிமையாளரிடம் ஏற்பட்ட தகராறில், கண்ணன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. மலேசிய போலீஸார் கண்ணனை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.

உயிருக்கு போராடும் தனது கணவரை மீட்டு, அழைத்துவர நடவடிக்கை எடுக்கு மாறு, தஞ்சை ஆட்சியரிடம் பெரியாச்சி மனு அளித்தார். அவரை மீட்க வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, விமானம் மூலம் திருச் சிக்கு நேற்று முன்தினம் வந்த கண்ண னுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்த பின்னர், பெரியாச்சி யின் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து தூத்துக்குடியில் உள்ள பெரியாச்சி ‘தி இந்து’விடம் கூறியது: அதிராம்பட்டினத்தில் சரக்கு வேன் ஓட்டிய எனது கணவர், போதிய வருவாய் இல்லாததால், வட்டிக்கு ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி, மலேசியாவில் உள்ள ஹோட்டலில் சப்ளையர் வேலைக்குச் சென்றார். ஆனால், அங்கு முறையாக சம்பளம் தராததால் இந்தியாவுக்கு திரும்பி வந்துவிடுமாறு கூறினோம்.

ரூ.1 லட்சம் தந்தால்தான் எனது கணவரின் பாஸ்போர்ட்டை தருவதாக ஹோட்டல் உரிமையாளர் கூறியுள்ளார். இதையடுத்து, பணம் சம்பாதிப்பதற்காக, எரிவாயு சிலிண்டர் ஏஜென்சியில் அவர் வேலைக்குச் சேர்ந்துள்ளார். சிலிண்டரை வேனில் ஏற்றுவதற்காக தரையில் உருட்டிச் சென்றபோது, அதை தூக்கிச் செல்லுமாறு உரிமையாளர் வற்புறுத்தியுள்ளார். ‘பசி மயக்கமாக இருப்பதால், தூக்க முடியவில்லை’ என்று எனது கணவர் கூறியுள்ளார். அப்போது உரிமையாளரும், மற்றொருவரும் சேர்ந்து என் கணவரின் முதுகில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர்.

அவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால், அவர்களுக்குப் பயந்து கொண்டு, தானே தீ வைத்துக்கொண்டதாக போலீஸில் கூறியுள்ளார். இங்கு வந்த பின்னர்தான், என்னிடம் நடந்த விவரங் களைக் கூறினார். கழுத்து, கை, கால்களில் ஏற்பட்ட காயங்கள் ஆறாததால், தூத்துக் குடி மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்.

மலேசியாவில் அவரது மருத்துவ சிகிச்சைக்காக, கடன் வாங்கி ரூ.1.10 லட்சம் அனுப்பினேன். ஏற்கெனவே வாங்கிய ரூ.50 ஆயிரம் கடனையும் அடைக்க முடியவில்லை. எனது குடும்பத்தின் நிலையைக் கருத்தில்கொண்டு, தமிழக முதல்வர் உதவ வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x