Published : 26 Nov 2013 12:26 PM
Last Updated : 26 Nov 2013 12:26 PM

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசின் நிலை என்ன? : ப.சிதம்பரம் விளக்குகிறார்

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசின் நிலை குறித்து காங்கிரஸ் சார்பில் வரும் 30-ம் தேதி சென்னையில் சிறப்பு கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. இதில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்கிறார்.

தமிழக சட்டசபை தீர்மானம், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் எதிர்ப்பு எல்லாவற்றையும் மீறி இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றது. பிரதமர் மன்மோகன் கலந்துகொள்ளவில்லை என்றாலும் அவரது சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையிலான குழு பங்கேற்றது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ற இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றம் குறித்து இலங்கை அரசு வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார். மார்ச் மாதத்துக்குள் இதை செய்யாவிட்டால் சர்வதேச விசாரணை கோரப்படும் என்றும் அவர் எச்சரித்தார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு காட்டாத அக்கறையை கேமரூன் காட்டியதாக தமிழக கட்சிகள் மற்றும் அமைப்புகள் பாராட்டு தெரிவித்தன.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீதும், காங்கிரஸ் கட்சி மீதும் தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து, இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசின் நிலையை விளக்குவதற்காக சென்னையில் சிறப்புக் கருத்தரங்கு ஒன்றை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. ‘இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும், மத்திய அரசின் நிலையும்’ என்ற தலைப்பில், மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள உட்லேண்ட்ஸ் ஓட்டலில், வரும் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு இந்தக் கருத்தரங்கு நடக்கிறது. இதில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு, இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு செய்துள்ள உதவிகள், திட்டங்கள் குறித்தும் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்தும் விளக்கிப் பேசுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x