சீமைக் கருவேல மரங்களை ஒழிப்பதற்கு ஒன்றுசேரும் கரங்கள்: தனிநபர் பங்களிப்பை ஊக்குவிக்க பரிசு - 250 செடிகளை வேருடன் கொண்டு வந்தால் ‘ஈஸி சேர்’

சீமைக் கருவேல மரங்களை ஒழிப்பதற்கு ஒன்றுசேரும் கரங்கள்: தனிநபர் பங்களிப்பை ஊக்குவிக்க பரிசு - 250 செடிகளை வேருடன் கொண்டு வந்தால் ‘ஈஸி சேர்’
Updated on
1 min read

உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமூக அமைப்புகள், இளைஞர்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் ஓரிரு கட்சிகள் என பல தரப்பினரும் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதில் தனி நபர் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், மணப்பாறை சின்னக்கடை வீதியில் உள்ள பர்னிச்சர் மற்றும் மெட்டல் விற்பனை நிலையத்தினர் இலவச அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, 1 அடி முதல் 2 அடி வரையிலான 250 சீமைக் கருவேல செடிகளை வேருடன் கொண்டுவந்து கொடுத்தால் ரூ.1,150 மதிப்பிலான ‘ஈஸி சேர்” இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இலவச திட்டத்தை செயல்படுத்தும் பர்னிச்சர் விற்பனை நிலைய உரிமையாளர் எம்.விஜயராஜ் கூறியது:

சீமைக் கருவேல மரங்கள் ஒழிப்புப் பணியில் தனி நபர் பங்களிப்பை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த இலவச அறிவிப்பை வெளி யிட்டுள்ளேன். மணப்பாறை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம். விரும்பினால் பிற பகுதி யினரும் கொண்டு வரலாம். வரும் 24-ம் தேதி வரை இந்தத் திட்டம் இருக்கும். வளர்ந்த சீமைக் கருவேல மரங்களை அடியோடு அகற்றுவதை விட செடிகளாக இருக்கும்போது அழிப்பது எளிது.

இந்த திட்டம் தனி நபருக்கு ஊக்கத்தை அளிக்கும் அதே வேளையில், சீமைக் கருவேல மரங்கள் ஒழிப்பில் நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற யோசனையை என்போன்ற பிற நிறுவனங்களுக்கும் ஒரு தூண்டு கோலாக இருக்கும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in