Published : 27 Nov 2013 12:00 AM
Last Updated : 27 Nov 2013 12:00 AM

ஆட்டோ டிரைவர் என் கணவர்தான் - அந்தமான் பெண் புகாருக்கு நடிகை பதிலடி

‘எனது கணவரை மீட்டுத் தாருங்கள்’ என்று அந்தமான் பெண் கொடுத்த புகாருக்கு டி.வி. நடிகை மறுப்பு தெரிவித்துள்ளார். புகாரில் கூறப்பட்டுள்ள ஆட்டோ டிரைவர் எனது கணவர்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

அந்தமானைச் சேர்ந்த செல்வ ராணி (21) என்பவர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஒரு புகார் கொடுத்தார். மானாமதுரையைச் சேர்ந்த எனது உறவினர் பூமிநாதனை 6 மாதங்களுக்கு முன்பு அந்தமானில் காதலித்து திருமணம் செய்துகொண்டேன். தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். சென்னை வந்த என் கணவர், பெருங்களத்தூரில் ஒரு டி.வி. நடிகையுடன் வசித்து வருகிறார். அவரை மீட்டு என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.

இந்தப் புகார் குறித்து சம்பந்தப் பட்ட டி.வி. நடிகை பிந்தியா ராணியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

எனது முதல் திருமணம் 1994–ம் ஆண்டு வண்டலூரில் நடந்தது. ஒரு மகன், மகள் பிறந்த பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கணவர் என்னைப் பிரிந்து சென்றுவிட்டார். அப்போது அந்தப் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்த பூமிநாதனை அவரது குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் இருந்ததால், வேறு குழந்தை வேண்டாம் என்று பூமிநாதன் சத்தியம் செய்து கொடுத்தார்.

எனது மகனும் மகளும் ஆரம்பக் கல்வியை மானாமதுரையில்தான் படித்தனர். பள்ளியில் கொடுத்த விண்ணப்பத்தில்கூட தந்தை பெயர் பூமிநாதன் என்றுதான் குறிப்பிடப் பட்டுள்ளது. நானும் பூமிநாதனும் 1999–ம் ஆண்டு முறைப்படி திருமணம் செய்துகொண்டோம்.

இந்நிலையில் வேலைக்காக அந்தமான் சென்றிருந்த எனது கணவரைத்தான் செல்வராணி மிரட்டி திருமணம் செய்திருக்கிறார். பூமிநாதன் என் கணவர்தான். அவரை யாருக்கும் விட்டுத் தரமாட்டேன்.

இவ்வாறு நடிகை பிந்தியா ராணி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x