Published : 21 Apr 2016 10:56 AM
Last Updated : 21 Apr 2016 10:56 AM
சேலம் பொதுக்கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் இருவர் திடீரென மரணமடைந்தது மனத் துயரமளிப்பதாக அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நேற்று (புதன்கிழமை) நடந்த ஜெயலலிதா பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக தொண்டர்கள் 2 பேர் கடும் வெயிலால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தனர். மேலும் பெண் எஸ்ஐ உள்ளிட்ட 3 பேர் மயக்கமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "16.5.2016 அன்று நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்துல் கலந்து கொள்வதற்காக வந்த கங்கவல்லி ஒன்றியம் கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.பெரியசாமி, கூத்தாண்டிபாளையத்தைச் சேர்ந்த எஸ்.பச்சியண்ணன் ஆகியோர் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனத் துயரம் அடைந்தேன்.
பெரியச்சாமி, பச்சியண்ணன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால். மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தேர்தல் முடிந்த பிறகு கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT