Last Updated : 26 Sep, 2013 05:18 PM

 

Published : 26 Sep 2013 05:18 PM
Last Updated : 26 Sep 2013 05:18 PM

தாது மணல் விவகாரம்: மோதல் ஏற்படும் அபாயம்

தாது மணல் விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது மணல் குவாரிகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் தாது மணல் குவாரிகளை அரசு நிரந்தரமாக மூட வேண்டும், முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர் ஐக்கிய முன்னணி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மீனவர் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

ஆனால் தாது மணல் குவாரிகளுக்கு ஆதரவாக விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த சிலர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அதேபோல் திருநெல்வேலி ஆட்சியரிடமும் ஒரு பிரிவினர் மனு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் தூத்துக்குடி குரூஸ் பர்னாந்தீஸ் பேரவை என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் அதன் தலைவர் ஏ. ஜோசப் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அதில் மணல் குவாரிகளால் மீன் வளத்திற்கோ, கடல் வளத்திற்கோ எந்த பாதிப்பும் இல்லை. ஏராளமான மக்கள் வேலை பாதிப்பதால், தடையை நீக்க வேண்டும் என கோரியிருந்தனர்.

இவ்வாறு ஆதரவாகவும், எதிராகவும் போட்டிப் போட்டு மனுக்களை கொடுப்பதால் தூத்துக்குடியில் மீனவர்களிடையே பிளவு ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே தாது மணல் குவாரி பிரச்னை காரணமாக திருநெல்வேலி மாவட்டம் கூத்தன்குழியை சேர்ந்த சுமார் 150 பேர் செவ்வாய்க்கிழமை ஊரை விட்டு வெளியேறி, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள சொக்கன்குடியிருப்பு மணல் மாதா ஆலயத்தில் தஞ்சம் புகுந்தனர். அவர்களுக்கு காவல் துறை சார்பில் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாது மணல் குவாரிக்கு ஆதரவாக மனு கொடுத்த ஜோசப் வீட்டை புதன்கிழமை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் முற்றுகையிட திரண்டனர். இதேபோல் ஆதரவாக சிலரும் அங்கு கூடியதால் மோதல் ஏற்படும் நிலை உருவானது.

தகவல் அறிந்து தூத்துக்குடி டி.எஸ்.பி. கந்தசாமி தலைமையில் ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், போலீஸார் அவர்களை எச்சரித்து அனுப்பினர். பதட்டம் நிலவுவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இது பற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மா.துரை கூறிய தாவது: சாத்தான்குளம் அருகே தேவாலயத்தில் தஞ்சம் அடைந்தவர்கள் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக கிராமத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்படுவதால் வந்துள்ளனர். மாவட்டத்தில் தாது மணல் பிர்ச்சினை தொடர்பாக எந்தவித மோதலும் இல்லை. காவல் துறை சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

தூத்துக்குடி பாத்திமாநகர் பகுதியில் தாது மணல் குவாரிகளுக்கு ஆதரவாக மனு கொடுத்தவர் வீட்டை புதன்கிழமை முற்றுகையிட முயன்றவர்களை போலீஸார் கலைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x