Published : 20 Sep 2016 08:18 AM
Last Updated : 20 Sep 2016 08:18 AM
சிறைத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ராம்குமார் அடைக்கப்பட்டு இருந்த பிளாக்கில் உள்ள மின்சார சுவிட்ச் பாக்ஸ் கடந்த சில தினங்களாக பழுதடைந்து காணப்பட்டுள்ளது. அதை சரி செய்ய சிறையில் உள்ள எலக்ட்ரீஷியனிடம் சொல்லியும் அவர் செய்யவில்லை என்று தெரிகிறது. மேலும் அந்த பிளாக்கில் உள்ள கண்காணிப்பு கேமராவும் பழுதடைந்துள்ளது. இதனால் ராம்குமார், தற்கொலை நிகழ்வு அதில் பதிவாகவில்லை.
சிறைக்கு சென்று ஆய்வு நடத்திய மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி, இதுதொடர்பாக சிறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அதற்கு பதிலளிக்க முடியாமல் அவர்கள் அமைதியாக இருந்துள்ளனர். அடுத்து சிறைக்காவலர் பேச்சிமுத்து மற்றும் சக கைதிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அப்போது சில தகவல்களை மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி குறிப்பு எடுத்துள்ளார். இது சிறைத்துறை அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராம்குமாருடன் அறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளிடம் நடத்திய விசாரணையிலும் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. புழல் சிறையில் உள்ள சுவிட்ச் பாக்ஸ் அனைத்தும் கைக்கு எட்டாத உயரத்தில் (சுமார் 10 அடி உயரம்) வைக்கப்பட்டுள்ளன. ராம்குமார், சிறைக்காவலர் அமர்ந்திருந்த பெஞ்சை பயன்படுத்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. சுவிட்ச் பாக்ஸ் பழுதடைந்து இருந்ததால் அதை எளிதில் ராம்குமார் உடைத்துள்ளார். விசாரணை நடந்து வருவதால் இப்போதைக்கு வேறு எதுவும் சொல்ல முடியாது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT