Published : 15 Apr 2017 09:26 AM
Last Updated : 15 Apr 2017 09:26 AM
ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது திரு நட்சத்திரப் பெருவிழா சென்னை யில் நடந்தது. உலகம் முழுவதும் இருந்து முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர். ராமானுஜர் போல பல புனிதர்களைப் பெற்றெடுத்த புண்ணிய பூமி இந்தியா என மொரீஷியஸ் துணை அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி புகழாரம் சூட்டினார்.
ஆழ்வார்கள் ஆய்வு மையம், பாரத் பல்கலைக்கழகம் சார்பில் பகவத் ராமானுஜரின் ஆயிர மாவது திருநட்சத்திரப் பெருவிழா மற்றும் முதல் உலக வைணவ மாநாடு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைத்தார். ஆழ்வார்கள் ஆய்வு மைய நிறுவன செயலர் எஸ்.ஜெகத்ரட்சகன் வரவேற்றார். விழாவில் முக்கியப் பிரமுகர்கள் பேசியதாவது:
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமத் பரமஹம்ச அப்பன் பரகால எம்பார் ஜீயர் சுவாமிகள்: நமது அறிவு பகுத்தறிவாக இருக்க வேண்டும். அதற்கான ஆற்றலை மனிதர்களுக்கு மட்டுமே இறைவன் கொடுத்துள்ளான்.
சிறப்பு விருந்தினரான மொரீஷியஸ் துணை அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி: மொரீஷியஸில் இந்துக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இதில் 15 சதவீதம் பேர் தமிழர்கள். மொரீஷியஸிலும் சிவராத்திரி, தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, பொங்கல், ராமநவமி, யுகாதி என அனைத்துப் பண்டிகைகளையும் கொண்டாடுகிறோம். ராமானுஜர் போல பல புனிதர்களைப் பெற்ற புண்ணிய பூமி இந்தியா. தமிழால் ராமானுஜருக்குப் பெருமை. அவரால் தமிழுக்குப் பெருமை.
தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகர துணை மேயர் லோகநாதன் என்ற லோகிநாயுடு: பழமையான தமிழ் கலாச்சாரம் உலக நாடுக ளுக்கு முன்னோடியாக உள்ளது. சிறந்த சமூக சீர்திருத்தவாதியான ராமானுஜரை உலகமே போற்றுகிறது.
ஆஸ்திரேலியாவின் ஆபர்ன் நகர துணை மேயர் பால.பாலேந் திரா: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புரட்சி செய்த தத்துவஞானியை நினைவுகூர்ந்து இப்போது விழா எடுக்கிறோம். இறைவழிபாட்டுக்கு சாதி, குலம், கல்வி, செல்வம் தடை யாக இருக்கக்கூடாது என்ற கொள் கைக்கு வித்திட்ட மகான்.
* தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன்: தொட்டால் தீட்டு, கண்டால் தீட்டு, கேட்டால் தீட்டு என்றிருந்த தடைகளை எல்லாம் உடைத்து எறிந்த ராமானுஜரை விவேகானந்தர் வெகுவாக புகழ்ந்துள்ளார். ‘எனக்கு ஞானம் தந்தது தமிழ்தான்’ என உலகுக்கு உரக்கச் சொல்லி, மந்திர உபதேசம் செய்தவர் ராமானுஜர்.
இவ்வாறு அவர்கள் பேசினர். விழாவில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சன்னி பிள்ளை, வளைகுடா நாடுகளைச் சேர்ந்த சித்ரா, முன்னாள் நீதிபதிகள் பாஸ்கரன், ஜெகதீசன், திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக் கரசர், மூத்த தலைவர் குமரி அனந்தன் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT