Published : 19 Mar 2017 09:57 AM
Last Updated : 19 Mar 2017 09:57 AM

வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் பறிமுதல்: சேலத்தில் பெண் உட்பட 5 பேர் கைது

சேலத்தில் இருந்து ரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் சிலையை வெளிநாட்டுக்குக் கடத்த முயன்ற பெண் உள்ளிட்ட 5 பேரை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்து, சிலையை பறிமுதல் செய்தனர்.

சேலம் மாவட்டம் இரும்பாலை அடுத்துள்ள பால்பண்ணை பகுதி யில் ஒரு கும்பலிடம் மரகத லிங்கம் சிலை இருப்பதாகவும், அதை நேற்று மதியம் சேலத்தில் இருந்து கோவை எடுத்துச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் வெளி நாட்டுக்குக் கடத்த இருப்பதாகவும் போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்க வேல் தலைமையிலான போலீஸார் நேற்று சேலம் இரும்பாலை அடுத்த அழகுசமுத்திரம் என்ற பகுதியில் காரில் சிலையை கடத்தி வந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்த மரகத லிங்கம் சிலையை பறிமுதல் செய்து, காரில் இருந்த வள்ளி என்ற பெண் மற்றும் மாரியப்பன், சீனிவாசன், சரவணன், குமரேசன் ஆகியோரை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சிலை 7 கிலோ எடை கொண்டது. சர்வதேச சந்தையில் இந்த சிலையின் மதிப்பு சுமார் 25 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சிலை, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பழம்பெரும் கோயிலுக்குச் சொந்தமானது.

இந்தச் சிலை எந்த கோயிலில் இருந்து எடுக்கப்பட்டது? யாருக் காக கடத்தப்பட்டது? என்பது குறித் தும், இதற்கு முன்னர் இந்த கும்பல் வேறு ஏதேனும் சிலைகளை கடத்தி விற்பனை செய்துள்ளனரா? என்பது குறித்தும் கைதான 5 பேரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐஜி பொன்.மாணிக்கவேல் கூறும்போது, ‘‘தமிழகத்தில் உள்ள கோயில்களில் சிலைகள் திருடப் படாமல் இருக்க, பாதுகாப்பை பலப்படுத்த கோயில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோயில்களில் உள்ள பாதுகாப்பு குறித்து அந்தந்த மாவட்ட, மாநகர போலீஸார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில், கோயில்களில் இருந்து சிலைகளை வெளிநாடு களுக்கு கடத்தப்படுவது தடுக்கப் பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x