

சொத்துக்குவிப்பு வழக்கில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
இந்நிலையில் இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்து கூறிய ஸ்டாலின், '' சொத்துக்குவிப்பு வழக்கில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. முன்பு நீதிபதி குன்ஹா தந்த தீர்ப்பு அப்படியே நிலைநாட்டப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.
அரசியல்வாதிகள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தத் தீர்ப்பு சான்று.
தீர்ப்பு வந்துவிட்ட காரணத்தால் நிலையான ஆட்சியை அரசியல் சாசன சட்டப்படி தமிழகத்தில் உருவாக்குவதற்கு, ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.