Published : 30 Jan 2014 12:00 AM
Last Updated : 30 Jan 2014 12:00 AM

திருவள்ளூர்: ஒப்பந்த லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்- காஸ் சிலிண்டர் விநியோகம் பாதிப்பு

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் கேஸ் சிலிண்டர் நிரப்பும் தொழிற்சாலையில், ஒப்பந்த லாரி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் காஸ் சிலிண்டர் நிரப்பும் தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்து சிலிண்டர்கள் நிரப்பப்பட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார் உள்பட ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன.

இந்த தொழிற்சாலையில், 30 ஒப்பந்ததாரர்கள் 160 லாரிகளை இயக்குகின்றனர். இதன் மூலம், நாள் ஒன்றுக்கு 33 ஆயிரம் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இங்கிருந்து சிலிண்டர்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கான வாடகை ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் போது, வாடகையை உயர்த்தித் தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. 50 கி.மீ., வரை செல்லும் லாரிகளின் தற்போதைய வாடகையான ரூ.2,300-ல் இருந்து ரூ.3,000 ஆக உயர்த்தித் தர லாரி உரிமையாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், இக்கோரிக்கையை ஏற்க பாரத் நிறுவனம் மறுத்து விட்டதாகவும், வாடகையை ரூ.2,500 ஆக வழங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், தாங்கள் கேட்கும் வாடகை உயர்வுபடி பாரத் நிர்வாகம் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் எனக் கூறி லாரி உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மேற்கண்ட மாவட்டங்களில் காஸ் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x