Published : 14 Sep 2016 07:51 AM
Last Updated : 14 Sep 2016 07:51 AM

மாணவர் வெட்டப்பட்ட சம்பவம்: 15 பேரை பிடிக்க நடவடிக்கை - கல்லூரியை அடித்து நொறுக்கிய 22 பேர் கைது

பெருமாள்பட்டில் தனியார் கல்லூரியில் மாணவர் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், 15 பேரை தேடி வருகின்றனர். மேலும் கல்லூரியை அடித்து நொறுக்கிய 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரி வளாகத்திலேயே கலைக் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. கல்லூரி கேன்டீனில் நேற்று முன்தினம் பெருமாள்பட்டைச் சேர்ந்த சேர்ந்த பி.பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர் அஜீத்குமார் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 15-க்கும் மேற்பட்டோர் அஜீத்குமாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஆத்திரம் அடைந்த கும்பல் அஜித்குமாரை சுற்றி வளைத்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டியுள்ளனர். இதில் அவரது தலை, முதுகு, தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் அவர் துடித்தார்.

தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் உடனே அங்கிருந்து தப்பி ஓடியது. படுகாயம் அடைந்த அஜீத்குமாரை மற்ற மாணவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

உறவினர்கள் தாக்குதல்

தகவல் அறிந்ததும் அஜீத்குமாரின் உறவினர்கள் 50-க் கும் மேற்பட்டோர் கல்லூரிக்கு வந்தனர். அவர்கள், கல்லூரி நிர்வாகத்தினரிடம் வாக்குவாதம் செய்தனர்.

மேலும், கல்லூரியை அடித்து நொறுக்கினர். கல்லூரியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டதில், அவை சேதம் அடைந்தன. கல் வீச்சில் அங்கு இருந்த ஏ.டி.எம் மையத்தின் கண்ணாடியும் நொறுங்கியது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போர்க்களம் போல் காட்சி

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.

இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. கல்லூரிக்குள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக பெருமாள்பட்டைச் சேர்ந்த பிரேம்குமார், சத்யமூர்த்தி செல்வக்குமார், வீரராகவன், புகழ்வாணன் உட்பட 22 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களில் 5 பேர் 17 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இதேபோல் மாணவர் அஜீத்குமாரை வெட்டியதாக சோபன்பாபு, ஆகாஷ், பரத், விக்கி, லெனின், ஆல்ஷன், அலெக்ஸ் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தை அடுத்து, கல்லூரி முன்பு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x