Published : 07 Mar 2014 12:40 PM
Last Updated : 07 Mar 2014 12:40 PM

கொழும்பு பேச்சுவார்த்தைக்கு முன்னர் தமிழக மீனவர் விடுதலை இல்லை: இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் தகவல்

கொழும்பில் நடைபெற உள்ள இரண்டாம் கட்ட மீனவ பேச்சுவார்த்தைக்கு முன்னர் இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படமாட்டார்கள் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தமிழக -இலங்கை இருநாட்டு மீனவர்களின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை கொழும்பில் மார்ச் 13 அன்று நடைபெற உள்ளது.

கொழும்பில் நடைபெற உள்ள மீனவப் பேச்சு வார்த்தைக்கு முன்னர் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 177 தமிழக மீனவர்களும் அவர்களின் படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் இந்த கோரிக்கையை இலங்கை அரசு ஏற்க மறுத்துவிட்டது.

இதுகுறித்து இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன வியாழக்கிழமை வவுனியாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

"சென்னையில் ஜனவரி 27 அன்று நடைபெற்ற இருநாட்டு மீனவப் பேச்சுவார்த்தைகளின்போது இந்திய மீனவர்கள் ஒரு மாத காலத்திற்க எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க வரமாட்டோம் என்று உறுதியளித்திருந்தார்கள். ஆனால் கொடுத்த உறுதிமொழியை மீறி எல்லை தாண்டி வந்தவர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். இது தொடர்பாக இலங்கை நீதிமன்றம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும்.

தமிழக முதல்வர் கொழும்பு பேச்சுவார்த்தைக்கு முன்னர் மீனவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என கோரியிருந்தார் ஆனால் அவ்வாறு மீனவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x