Published : 15 Mar 2017 11:30 AM
Last Updated : 15 Mar 2017 11:30 AM

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் அறிவிப்பு

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக என்.மருதுகணேஷ் என்கிற என்.எம்.கணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வருகிற 12-4-2017 அன்று நடைபெற இருக்கும் ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தோழமைக் கட்சிகளின் ஆதரவு பெற்ற திமுக வேட்பாளராக என்.மருதுகணேஷ் என்கிற என்.எம்.கணேஷ் போட்டியிடுவார் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 பேரிடம் நேர்காணல்:

முன்னதாக, திமுக சார்பில் ஆர்.கே.நகரில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து கடந்த 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. விருப்ப மனு அளித்தவர்களிடம் நேற்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்தப்பட்டது.

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேர்காணல் நடத்தினர். முதன்மைச் செயலாளர் துரைமுருகன், சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.

முக்கிய கேள்விகள்:

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன், ராயபுரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மதிவாணன், காமராஜரின் உறவினர் மயூரி உள்ளிட்ட 17 பேர் நேர்காணலில் பங்கேற்றனர். தேர்தலில் வெற்றி பெற என்னென்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? ஆளுங்கட்சியான அதிமுகவை எதிர்கொள்ள முடியுமா? எவ்வளவு செலவு செய்ய முடியும்? தொகுதியில் எந்த அளவுக்கு உங்களுக்கு செல்வாக்கு உள்ளது? என பல்வேறு கேள்விகள் நேர்காணலின்போது கேட்கப்பட்டன.

'திமுகவுக்கே வெற்றி'

நேர்காணல் முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின், "ஆர்.கே.நகரில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணல் முடிந்துள்ளது. வேட்பாளர் யார் என்பதை திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆலோசித்து நாளை (இன்று) அறிவிக்கப்படும். ஆர்.கே.நகரில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திமுக சார்பில் யார் போட்டியிட்டாலும் வெற்றி உறுதி. அதிமுகவின் மூன்று பிரிவுகள் போட்டியிட்டாலும், டிடிவி தினகரன் போட்டியிட்டாலும் எங்களுக்கு கவலை இல்லை. ஊடகங்கள் வெளிப்படுத்தாத மக்கள் பிரச்சினைகளை தேர்தல் பிரச்சாரத்தில் எடுத்து வைப்போம்" எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக என்.மருதுகணேஷ் என்கிற என்.எம்.கணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

திமுக வேட்பாளர் மருது கணேஷ் (42), இரண்டு முறை அக் கட்சியில் வட்டச் செயலாளராக இருந்தவர். தற்போது ஆர்.கே. நகர் கிழக்கு பகுதி திமுக செயலாளராக உள்ளார். தாயார் பார்வதி 1996 முதல் 2001 வரை சென்னை மாநகராட்சி கவுன்சில ராக இருந்தவர். தற்போது திமுக பொதுக்குழு உறுப்பினராக இருக் கிறார். தமிழ் நாளிதழின் தண்டை யார்பேட்டை பகுதி நிருபரான மருது கணேஷ், வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட் டதும் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோரை சந்தித்து மருது கணேஷ் வாழ்த்து பெற்றார்.

வெற்றி உறுதி

வேட்பாளராக அறிவிக்கப் பட்டது குறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறும்போது, ‘‘கடந்த 40 ஆண்டுகளாக ஆர்.கே.நகர் பகுதியில் வசித்து வருகிறேன். வட சென்னை பகுதியில் நடக்கும் அனைத்து போராட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். பல ஆண்டுகளாக எனது கட்சிப் பணியை பார்த்து வந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த வாய்ப்பை அறிவித்துள்ளார். கூட்டணி கட்சிகள் மற்றும் ஸ்டாலினின் பிரச்சாரத்தால் நிச்சயம் வெற்றி பெறுவேன். கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தீவிரமாக பிரச்சாரம் செய்வேன்’’ என்றார்.

ஸ்டாலின் சமாதானம்

கடந்த 2016 தேர்தலில் ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன் தற்போதும் வாய்ப்பு கேட்டிருந்தார். மறைந்த திமுக துணைப் பொதுச்செய லாளர் எஸ்.பி.சற்குண பாண்டிய னின் மருமகள் என்பதால் அவ ருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென மருது கணேஷ் வேட்பாள ராக அறிவிக்கப்பட்டார்.

வேட்பாளர் அறிவிப்பின்போது அண்ணா அறிவாலயத்தில் இருந்த சிம்லா முத்துச்சோழன் அதிருப்தி அடைந்தார். அவரை ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட் டோர் சமாதானம் செய்ததாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x