Published : 06 Apr 2016 02:25 PM
Last Updated : 06 Apr 2016 02:25 PM
தேமுதிக கூட்டணி உடன்பாட்டுக்கு முன் திமுக, பாஜக கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது என்று தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி உருவாகக் காரணம் பிரேமலதா தான். தலைவர் விஜயகாந்துக்குப் பிடிக்காத, நிர்வாகிகளுக்குப் பிடிக்காத, தொண்டர்களுக்குப் பிடிக்காத தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கியது பிரேமலதாதான். அவர் தான் கூட்டணிக்காக வைகோவிடம் பேசினார். இதை பகிரங்க குற்றச்சாட்டாகவே சொல்கிறேன்.
வேட்பாளர் நேர்காணலில் திமுக கூட்டணிக்கு தேமுதிக செல்லலாமா? என்று விஜயகாந்த் கேட்டார். திமுகவின் முக்கிய பிரமுகரை இல்லத்துக்கு அழைத்து வந்து 'உங்களுடன் வரத் தயார். 20 நாட்கள் பொறுத்திருங்கள்' என்று விஜயகாந்த் சொன்னார்.
அந்த அடிப்படையில்தான் திமுக தலைவர் கருணாநிதி 'பழம் கனிந்து கொண்டிருக்கிறது. வெகுவிரைவில் பாலில் விழும்' என்று சொன்னார். இதையெல்லாம் ஏன் விஜயகாந்த் செய்தா? சொன்னார்? என்பதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.
திமுக பொருளாளர் ஸ்டாலின் நமக்கு நாமே பயணத்தில் 'தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் ஏற்பட்டிருந்தால் அந்த தவறை திருத்திக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்' என்றார்.
பாஜகவுடனும் தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது. தேமுதிக விடுத்த சில கோரிக்கைகளை பாஜக ஏற்கவில்லை. ஆனால், அதே கோரிக்கைகளை மக்கள் நலக் கூட்டணி ஏற்றுக்கொண்டது. இதனாலேயே தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி உருவானது. இந்த கூட்டணி உருவாக பிரேமலதா தான் முக்கியக் காரணம்'' என்றார் சந்திரகுமார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT