Published : 11 Dec 2013 05:36 PM
Last Updated : 11 Dec 2013 05:36 PM

மீனவர் பிரச்சினை: தமிழக அரசு மீது பாமக குற்றச்சாட்டு

மீனவர்கள் பிரச்சினையில் தமிழக அரசு கடமைக்கு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், முதல்வர் ஜெயலலிதா இதுவரை பிரதமருக்கு 34 முறை கடிதம் எழுதியும் பலனில்லை என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "நாகை மாவட்ட மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், சிங்களக் கடற்படையினர் அத்துமீறி நமது எல்லைக்குள் புகுந்து 250 மீனவர்களை கைது இழுத்துச் சென்றுள்ளனர். அவர்களுக்குச் சொந்தமான 36 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல்கள் அதிகரித்து வருகிறது. தமிழக மீனவர்களை என்ன செய்தாலும் இந்தியா கேட்காது என்ற தைரியத்தில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இதை இனியும் அனுமதித்தால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கே ஆபத்தாக அமைந்து விடும்.

எனவே, கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்வதுடன், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும். அவ்வாறு செய்ய மறுத்தால் இலங்கைக்கு இந்தியா சரியான பாடம் புகட்ட வேண்டும்.

மீனவர்கள் பிரச்சினையில் தமிழக அரசு கடமைக்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. மீனவர்கள் கைது தொடர்பாக இதுவரை 34 முறை பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், அதற்கு இதுவரை எந்த பயனும் ஏற்படவில்லை.

எனவே, இனியும் பிரதமருக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்காமல் மீனவர்கள் பிரச்சினையில் தமிழகத்தின் உணர்வை மத்திய அரசுக்கு தெரிவிக்க ஆக்கபூர்வமான, அர்த்தமுள்ள நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும்" என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x