Published : 11 Mar 2014 03:32 PM
Last Updated : 11 Mar 2014 03:32 PM
பிளஸ் 2 இயற்பியல் தேர்வு எளிமையாக இருந்தாலும், தியரி வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டதாக மாணவ, மாணவிகள் கூறினர்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த 3-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தொழில்கல்வி படிப்புகளுக்கான முக்கியத் தேர்வுகள் திங்கள்கிழமை முதல் தொடங்கின. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தலைமையில் கூடுதலாக சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் தேர்வு மையங்களில் சிறப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இயற்பியல், பொருளாதார பாடங்களுக்கான தேர்வுகள் திங்கள்கிழமை நடந்தன. மருத்துவம், பொறியியல், விவசாயம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட தொழில்கல்வி படிப்புகளில் சேருவதற்கு இயற்பியல் தேர்வு மதிப்பெண் முக்கியமானது.
தியரி கேள்விகள்
இயற்பியல் தேர்வில் தியரி மற்றும்கணக்கீட்டு முறை வினாக்கள் இடம் பெற்றிருக்கும். தியரி கேள்விக்கு பதில் அளிக்க அதிக நேரம் பிடிக்கும். அதில் முழு மதிப்பெண் கிடைப்பதும் கடினம். ஆனால், கணக்கு போட்டு செய்யும் (சம்) வினாக்களுக்கு விரைவாக பதில் அளிக்க முடிவதுடன் முழு மதிப்பெண்ணும் கிடைக்கும் என்று மாணவர்கள் பொதுவாக கருதுவதுண்டு.
இந்த ஆண்டு இயற்பியல் தேர்வில் தியரி வினாக்களே அதிகம் இடம்பெற்றிருந்ததாக மாணவ, மாணவிகள் கூறினர். சென்னை எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய மாணவிகள் கூறுகையில், ‘‘தேர்வு கடினம் என்று சொல்ல முடியாது. அதேநேரத்தில் தியரி வினாக்கள் அதிகளவு கேட்கப்பட்டதால் அவற்றுக்குப் பதிலளிக்க அதிக நேரம் பிடித்தது. மற்றபடி தேர்வு எளிதாகத்தான் இருந்தது’’ என்றனர்.
இயற்பியல் ஆசிரியை புஷ்பா கூறுகையில், “தியரியில் அதிக வினாக்கள் கேட்கப்பட்டிருப்பது உண்மைதான். ஒரு மதிப்பெண் வினாக்களில் ஒரு சில கடினமாக தோன்றினாலும் கொஞ்சம் யோசித்தால் எளிதாக பதில் அளித்துவிட முடியும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT