Published : 07 Jun 2017 02:56 PM
Last Updated : 07 Jun 2017 02:56 PM

ராணுவத்தில் சேர போலி சான்றிதழ் அளித்த 5 இளைஞர்கள் கைது

குன்னூர் ராணுவ மையத்தில் ஆள் சேர்ப்பு முகாமில் போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர முயன்ற திருவண்ணாமலையைச் சேர்ந்த 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் ராணுவ முகாமில் கடந்த இரு நாட்களாக ஆள் சேர்க்கும் முகாம் நடந்தது.உடற்தகுதி, எழுத்துத் தேர்வு முடிவடைந்து, இன்று (புதன்கிழமை) சான்றிதழ் சரி பார்க்கும் பணி நடந்தது.

அப்போது திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுக்காவை சேர்ந்த சதீஷ் குமார், சக்திவேல், திருப்பதி, மணிகண்டன், மோகன் ஆகிய ஐந்து நபர்களின் ஆவணங்கள் போலியானவை என தெரிய வந்தது.

எனவே, ராணுவ அதிகாரிகள் வெலிங்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆய்வாளர் தங்கம் தலைமையில் போலீஸார், இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இளைஞர்கள் கொடுத்த வயது, மாற்று சான்றிதழ் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் சான்றிதழ்கள் போலியானவை என உறுதி செய்யப்பட்டது.

எனவே, ஐந்து இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் கைது செய்தனர். பின்னர் குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். ஐந்து இளைஞர்களையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் இளைஞர்கள் குன்னூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இளைஞர்களுக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x