Published : 28 Feb 2014 10:00 AM
Last Updated : 28 Feb 2014 10:00 AM

பெண் இன்ஜினீயரை 3 முறை கத்தியால் குத்தினேன்: கொல்கத்தாவில் கைதான உஜ்ஜல் மண்டல் வாக்குமூலம்

கொல்கத்தாவில் கைது செய்யப்பட்ட உஜ்ஜல் மண்டல் தான்தான் பெண் இன்ஜினீயரை 3 முறை கத்தியால் குத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் பொறியாளர் உமா மகேஸ்வரி கடந்த 13-ம் தேதி கொலை செய்யப்பட்டார். சிப்காட் வளாகத்துக்குள்ளேயே அவரது உடல் 22-ம் தேதி மீட்கப்பட்டது. அவரைக் கொலை செய்ததாக மேற்குவங்கம் மாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்கள் உத்தம் மண்டல், ராம் மண்டல் ஆகியோர் 25-ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 7 நாள் போலீஸ் காவலில் உள்ளனர்.

கொலையாளிகளில் ஒருவரான உஜ்ஜல் மண்டல் கொல்கத்தா தப்பிச் சென்றார். அவரை காவல் துறை அதிகாரிகள் விமானத்தில் கொல்கத்தா சென்று 26-ம் தேதி கைது செய்தனர். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மாலையில் உஜ்ஜல் மண்டலை ஆஜர்படுத்தினர். அவரிடம் 6 நாள் போலீஸ் விசாரணை நடத்த நீதிபதி சிட்டிபாபு உத்தரவிட்டார். இந்த வழக்கில் கைதாகியுள்ள மூன்று பேரின் போலீஸ் காவலும் மார்ச் 4-ம் தேதி முடிகிறது.

இந்நிலையில் உஜ்ஜல் மண்டல் அளித்த வாக்குமூலத்தில் உமா மகேஸ்வரி தன் மீது எச்சில் துப்பியதால் ஆத்திரமடைந்து தான்தான் 3 முறை அவரை கத்தியால் வயிற்றில் குத்தியதாகவும், அப்படியும் அவர் இறக்காததால் கழுத்தில் குத்தியதாகவும் கூறியதாக தெரியவந்துள்ளது. கொலை செய்ய அவர் பயன்படுத்திய கத்தியை போலீஸார் ஏற்கெனவே கைப்பற்றியுள்ளனர்.

உமா மகேஸ்வரி கொலையைத் தொடர்ந்து சிப்காட் வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்களின் கைரேகைகளை காவல் துறையினர் சேகரித்து வருகின்றனர். அவர்களின் முழு விவரங்களையும் காவல் நிலையத்தில் வந்து தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உமா மகேஸ்வரி கொலை வழக்கில் தொடர்புடைய இந்திரஜித் மண்டல் என்பவரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்டதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x