Published : 06 Mar 2014 12:00 AM
Last Updated : 06 Mar 2014 12:00 AM
திமுக கூட்டணிக்கு தேமுதிக வருவது பற்றி எனக்கு தெரியாது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற வாய்ப்புள்ளது எனவும், தேமுதிக குழுவினர் திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்து பேச இருப்பதாகவும் புதன்கிழமை தகவல்கள் வெளியாகின. இதனால், பத்திரிகையாளர் அங்கு குவிந்தனர். இரவு 9 மணி வரை தேமுதிகவில் இருந்து யாரும் திமுக அலுவலகத்துக்கு வரவில்லை.
இந்நிலையில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடித்து விட்டு வெளியே வந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், “திமுகவின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். விருப்ப மனுக்களைப் பெற்று வேட்பாளர் பட்டியல் தயாரித்து வருகிறோம். வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பிறகு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்” என்றார்.
தேமுதிக
அப்போது, “திமுக கூட்டணியில் தேமுதிக வர வாய்ப்புள்ளதா?” என நிருபர்கள் கேட்டனர். அதற்கு, “அப்படியா… எனக்கு தெரியாது!” என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
“தொகுதிப் பங்கீடு பேச்சு வார்தையில் உடன்பாடு ஏற்படாமல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோபித்துக் கொண்டு போனதாக கூறப்படுகிறதே?” என்ற கேள்விக்கு, “அப்படியா…?” என ஆச்சரியம் தெரிவித்தார்.
திருமாவளவன்
முன்னதாக, திமுக கூட்டணியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை முடித்து விட்டு விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அண்ணா அறிவாலயத்தில் பத்திரிகையாளர் காத்திருந்த நுழைவு வாயிலை தவிர்த்து பின்பக்கம் வழியாக அவசரமாக வெளியேறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT