Published : 18 Nov 2013 06:53 PM
Last Updated : 18 Nov 2013 06:53 PM

அவதூறு வழக்குகளில் நேரில் ஆஜராக விஜயகாந்துக்கு விலக்கு

தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு விலக்கு அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான மனு மீது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் இன்று விசாரணை நடத்தினர்.

அப்போது, தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட 8 அவதூறு வழக்குகளின் விசாரணைகளுக்காக அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களில் நேரில் ஆஜராவதில் இருந்து விஜயகாந்துக்கு விலக்கு அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கேப்டன் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி அரசுக்கு எதிராக அவதூறான கருத்தை வெளியிட்டதாகக் கூறி விஜயகாந்த் மீது சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இதேபோல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திண்டுக்கல், தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பூர், ஊட்டி மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நடந்த தேமுதிக பொதுக் கூட்டங்களில் அவதூறான கருத்துகளை பேசியதாகக் கூறி அந்தந்த மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றங்களில் விஜயகாந்துக்கு எதிராக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த அவதூறு வழக்குகளை தொடர்வதற்காக தமிழக அரசு தொடர்ந்த அரசாணைகள் செல்லாது என அறிவிக்கக் கோரியும், இந்த வழக்குகளின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்கக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் விஜயகாந்த் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x