Published : 03 Feb 2014 12:00 AM
Last Updated : 03 Feb 2014 12:00 AM

தேமுதிக கார் மோதி இருவர் காயம்: மருத்துவமனையில் சேர்த்தார் வைகோ

தேமுதிக தொண்டர்கள் வந்த கார் மோதிய விபத்தில் காயமடைந்து சாலையில் கிடந்த இருவரை மதிமுக பொதுச் செயலர் வைகோ மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையைச் சேர்ந்தவர் தண்டீஸ்வரன் (64). விவசாயியான இவர் தன் மருமகன் விஜயகுமாருடன், திருமங்கலம் அருகேயுள்ள எஸ்.பி.நத்தம் கிராமத்துக்குச் செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை நான்குவழிச் சாலையை பைக்கில் கடந்தார். அப்போது அந்த வழியாக தேமுதிக தொண்டர்கள் வந்த கார் அவர்களது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கில் வந்த இருவருக்கும் காயம் ஏற்பட்டது.

தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் இருந்து திண்டுக்கல் சென்றுகொண்டிருந்த வைகோ இந்த விபத்தைக் கண்டார். உடனே, காரை நிறுத்தி காயமடைந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கிய வைகோ, அவர்களை தனது காரிலேயே ஏற்றி மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல முயன்றார். உடன் வந்த கட்சியினர், தங்களுடைய வாகனத்தில் ஏற்றிக்கொள்வதாகக் கூறி, இரு வரையும் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அவர்களுடனே அரசு மருத்துவமனைக்குச் சென்ற வைகோ, காயமடைந்த இரு வருக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்குமாறு பணியில் இருந்த மருத்துவர் அருள்ராஜ்குமாரிடம் கேட்டுக்கொண்டார். பின்னர், விபத்து குறித்து அவர்களது உறவினர்களுக்குத் தெரிவித்து விட்டு வைகோ கிளம்பிச் சென்றார்.

இதுகுறித்து கள்ளிக்குடி போலீஸார் வழக்கு பதிந்து, கார் டிரைவரான நாகேந்திரனை (26) கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x