Published : 01 Sep 2016 08:47 AM
Last Updated : 01 Sep 2016 08:47 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடரும் வேட்டை: ஒரே நாளில் 5 போலி டாக்டர்கள் கைது

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குநர் டாக்டர் மோகனன் தலைமையிலான குழுவினர், பள்ளிப்பட்டு வட்டப்பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், பள்ளிப்பட்டு- மேற்கு தெருவில் 10-ம் வகுப்பு மட்டுமே படித்த சந்திரசேகரய்யா (86), கடந்த 40 ஆண்டுகளாக பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. அதேபோல், பள்ளிப்பட்டு- பஜார் தெருவில் 10-ம் வகுப்பு மட்டுமே படித்த வடிவேலு(45), பள்ளிப்பட்டு- சித்தூர் சாலையில் சந்திரசேகர்(45), பள்ளிப்பட்டு - சோளிங்கர் சாலையில் ஏகாம்பரம்(32) ஆகியோர் மருத்துவப் படிப்பு படிக்காமல், பல ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும், ஆர்.கே.பேட்டை பகுதியில், பி.எஸ்சி., விலங்கியல் படித்த விஜயகுமார்(54) கடந்த 10 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் மருத்துவத் துறை அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, மோகனன் அளித்த புகார்களின்பேரில் வழக்குகள் பதிவு செய்த பள்ளிப் பட்டு மற்றும் ஆர்.கே. பேட்டை போலீஸார், சந்திரசேகரய்யா, வடிவேலு, சந்திரசேகர், ஏகாம்பரம் மற்றும் விஜயகுமார் ஆகிய 5 போலி மருத்துவர்களை கைது செய்தனர். இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களில் கைது செய்யப்பட்ட போலி டாக்டர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்த தேடுதல் வேட்டையில் மேலும் பலர் சிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x